A.P.Mathan / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மைக் காலத்தில் காயம் காரணமாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடாமல் ஓய்விலிருந்த அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கேல் க்ளார்க், உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷ் அணியுடனான பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய அழைப்பு அணியின் சார்பில் விளையாடிய மைக்கேல் க்ளார்க், களத்தடுப்பு, பந்துவீச்சு, துடுப்பாட்டம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயற்பட்டுள்ளார். இந்தப் போட்டியின்போது முன்னைய காயங்கள், உடல் உபாதைகள் காரணமான சிரமங்கள் எதுவும் அவருக்கு ஏற்பட்டிருக்கவில்லை. எனவே, அவர் உலகக் கிண்ணத் தொடருக்கு சிறப்பாகத் தயாராகிவிடுவார் என்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது.
அதேநேரம், க்ளார்க் அணிக்குத் திரும்பினாலும் உலகக் கிண்ணத் தொடருக்கான அணித் தலைவராக அவர் செயற்படுவாரா என்கிற கேள்வி தற்போது பரவலாக முன்வைக்கப்பட்டுவருகிறது. ஏனெனில், தொடரின் நடுவில் மறுபடியும் க்ளார்க் உபாதைக்கு உள்ளானால் அணித்தலைமையில் மாற்றம் செய்ய நேரிடும். எனவே, தற்போதுள்ளதைப்போன்றே ஜோர்ஜ் பெய்லி அல்லது ஸ்டீபன் ஸ்மித் இருவரில் ஒருவரை அணித் தலைவராக நியமிப்பது அணிக்கு நல்லது என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இது குறித்து அவுஸ்திரேலிய அணி வீரர் ஆரோன் ஃபின்ச் கருத்துத் தெரிவிக்கும்போது, ''இது ஒரு பிரச்சினையே அல்ல. மூவருடைய தலைமையின் கீழும் எமது அணி மிகச்சிறப்பாக செயற்பட்டிருக்கிறது. எனவே, யார் தலைவராக இருந்தாலும் நாம் உலகக் கிண்ணத் தொடரில் எமது முழுத் திறமையை வெளிப்படுத்தி விளையாடுவோம். அணியில் க்ளார்க் இருப்பது மேலதிகப் பலத்தை தரும். அவரது அனுபவம், கிண்ணத்தை வெல்ல எமக்கு உதவிடும்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .