Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 29 , பி.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையைத் தனிப்பட்ட விடயம் எனக் குறிப்பிட்ட திலகரட்ண டில்ஷான், அதுபோன்ற தனிப்பட்ட விடயங்கள் குறித்துக் கவலைப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்த போதிலும், அணித்தலைமையிலிருந்து நீக்கப்பட்டமை வலித்ததாகத் தெரிவித்தார்.
இலங்கையின் முன்னாள் தலைவரான திலகரட்ண டில்ஷான், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து, நேற்று முன்தினம் இடம்பெற்ற இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3ஆவது போட்டியுடன் ஓய்வுபெற்றார். ஓய்வுபெற்ற பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை அணியின் தலைமைப் பதவியிலிருந்து குமார் சங்கக்காரவும் மஹேல ஜெயவர்தனவும் விலகிய பின்னர், அந்தப் பதவி, திலகரட்ண டில்ஷானுக்கு வழங்கப்பட்டது. எனினும், அப்பதவிக்காகத் தான் திட்டமிட்டிருக்கவில்லை என அவர் தெரிவித்தார். "அணித்தலைமைப் பதவியைப் பெற்றுக் கொள்வதற்கு நான் திட்டமிட்டிருக்கவில்லை. ஆனால், இன்னொருவரைக் கண்டுபிடிக்கும் வரை, ஆறு மாதங்களுக்கு அப்பதவியை ஏற்குமாறு, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் என்னிடம் கேட்டார்" என, டில்ஷான் தெரிவித்தார்.
தனது காலத்தில், தனது அதிர்ஷ்டம் இருந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அதன்போது தற்போதைய தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தொடர்பில் தெரிவித்த கருத்து, மத்தியூஸ் மீதான விமர்சனமா என்ற கேள்வியை எழுப்பியது.
"துரதிர்ஷ்டவசமாக, இரண்டு பந்துவீச்சாளர்களையும் நாம் இழந்திருந்திருந்தோம். முரளி ஓய்வுபெற்றிருந்தார். நுவான் குலசேகரவுக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. அஜந்த மென்டிஸூக்கும் காயம் ஏற்பட்டிருந்தது. சிறப்பான வளங்கள், எனக்கு இருந்திருக்கவில்லை. அஞ்சலோ மத்தியூஸூக்கு ஓராண்டாக கெண்டைக்கால் பின்தசை உபாதை ஏற்பட்டிருந்தது, அதனால் அவர் பந்துவீசியிருக்கவில்லை. அது என்னுடைய துரதிர்ஷ்டமாக இருக்க வேண்டும், ஏனென்றால் நான் பதவி விலகிய பின்னர், ஒரு வாரத்துக்குப் பின்னர் நாங்கள் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றோம். அந்த வாரத்தில், மத்தியூஸ் பந்துவீச ஆரம்பித்தார். மஹேலவின் நல்ல அதிர்ஷ்டம் காரணமாகத் தான் அது இருக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.
டில்ஷானின் தலைமைத்துவத்தின் கீழ், 9 போட்டிகளில் விளையாடிய மத்தியூஸ், 16 இனிங்ஸ்களில் 4 இனிங்ஸ்களில் மாத்திரமே பந்துவீசியிருந்தார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 22 போட்டிகளில் 12 போட்டிகளில் பந்துவீசிய மத்தியூஸ், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் 3 போட்டிகளில் எந்தவொரு போட்டியிலும் பந்துவீசியிருக்கவில்லை. ஆனால், டில்ஷானின் தலைமைத்துவத்தின் கீழ் மத்தியூஸ் விளையாடிய இறுதி 6 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் அவர் பந்துவீசியதோடு, இறுதி 5 டெஸ்ட்களில் ஒரே ஓர் இனிங்ஸைத் தவிர அனைத்து இனிங்ஸ்களிலும் அவர் பந்துவீசியிருந்தார். எனவே, மத்தியூஸ் வேண்டுமென்றே அவ்வாறு செயற்பட்டார் என, டில்ஷானின் கருத்தை எடுத்துக் கொள்ள முடியாது.
தென்னாபிரிக்க அணிக்கெதிராக 2011ஆம் ஆண்டு இறுதியிலும் 2012ஆம் ஆண்டு ஆரம்பத்திலும் இடம்பெற்ற தொடரின் முடிவில், அணித்தலைவர் பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்ட டில்ஷான், அதுகுறித்தும் கருத்துத் தெரிவித்தார். "தென்னாபிரிக்கத் தொடரின் முடிவில், எல்லாவற்றையும் தூக்கி ஓரமாக வைத்தேன். அவுஸ்திரேலியாவுக்குச் சென்றேன், 500 ஓட்டங்களைப் பெற்றேன், தொடரின் நாயகனாகத் தெரிவானேன். யார் தலைவராக இருப்பது என்பது எனக்குத் தேவையில்லாதது. என்னை அணித்தலைவர் பதவியிலிருந்து யார் அகற்றினார் என்பது தொடர்பாக நான் கவனம் செலுத்தியிருக்கவில்லை. நான் எப்போதும் நாட்டுக்காக விளையாடுபவன். இவ்வாறான தனிப்பட்ட விடயங்கள் குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால், எனக்கு அது வலித்தது" என்று தெரிவித்தார்.
இது தவிர, தலைவராக டில்ஷான் நியமிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதலாவது தொடரான இங்கிலாந்துக்கான இலங்கைத் தொடரில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 193 ஓட்டங்களைக் குவித்த டில்ஷான், அப்போட்டியில் விரலில் காயமடைந்தார். அதன் காரணமாக, அடுத்த போட்டியில் அவர் பங்குபற்ற முடியாது போக, அணித்தலைவர் பதவியை ஏற்பதற்கு எவரும் தயாராக இருந்திருக்கவில்லை என டில்ஷான் தெரிவித்தார். அப்போது, சனத் ஜெயசூரியவையோ அல்லது திலின கண்டம்பியையோ அணித்தலைவராக்கும் பேச்சும் காணப்பட்டதாகவும் டில்ஷான் தெரிவித்தார். அடுத்த போட்டியில், குமார் சங்கக்காரவே அணித்தலைவராகச் செயற்பட்டிருந்தார்.
தனது ஓய்வு குறித்துக் கருத்துத் தெரிவித்த டில்ஷான், ஓய்வுபெறுவதற்குத் திட்டமிட்டிருக்கவில்லை எனத் தெரிவித்த அவர், இன்னும் ஓர் ஆண்டுக்காவது விளையாடும் எதிர்பார்ப்பிலேயே இத்தொடரில் களமிறங்கியதாகவும், ஆனால், 25ஆம் திகதி நித்திரையிலிருந்து எழும் போது, ஓய்வுபெறுவதற்கான நேரம் இதுவென உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.
"உண்மையைச் சொல்வதானால், இன்னும் ஓர் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு என்னால் விளையாட முடியும். ஆனால், எதிர்காலத்தைப் பற்றிப் பார்க்க வேண்டியுள்ளது. இரண்டு ஆண்டுகள் நான் விளையாடினால், அடுத்த உலகக் கிண்ணத்துக்கு, 18 மாதங்களே இருக்கும். அது, அணியைப் பொறுத்தவரை சரியானதன்று" என அவர் மேலும் தெரிவித்தார்.
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வுபெற்றாலும், எதிர்வரும் 6ஆம், 9ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில், அவர் பங்குபற்றிய பின்னரே, அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
34 minute ago
46 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
46 minute ago
2 hours ago
2 hours ago