2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

நாளை ஆரம்பிக்கிறது ஒ.நா.ச.போ தொடர்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 23 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் இன்று ஆரம்பிக்கிறது. இலங்கை நேரப்படி நாளை மாலை 6.30மணிக்கு சௌதாம்டனில் ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடனேயே இத்தொடர் ஆரம்பிக்கிறது.

இரண்டு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் 2-2 என்ற நிலையில் சமநிலையில் முடிவடைந்து டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி முதலிடத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், தடுமாறி வரும் பாகிஸ்தானின் ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கான அணியும் முன்னேற்றத்தை எதிர்பார்த்தே இத்தொடரில் களமிறங்குகிறது.

ஒழுக்காற்றுப் பிரச்சினைகளின் தொடர்ச்சி காரணமாக பாகிஸ்தான் குழாமில் அஹமட் ஷெஷாட் இடம்பெற்றிருக்காத நிலையில் அவருக்குப் பதிலாக இடம்பிடித்த ஷர்ஜீல் கான் அயர்லாந்துடனான போட்டியில் அதிரடியை வெளிக்காட்டியுள்ளார். இந்நிலையில், ஆரம்பத்தில் அணித்தலைவர் அஸார் அலி மெதுவாகத் துடுப்பெடுத்தாடினாலும் அணியைப் பெரிதாக பாதிக்காது. மத்திய வரிசையில் இளம் துடுப்பாட்டவீரர் பாபர் அஸாம், சிரேஷ்ட வீரர் ஷோய்ப் மலிக் ஆகியோர் அணிக்கு உறுதியை வழங்குவதுடன், இறுதி ஓவர்களுக்கு தேவையான அதிரடியை சகலதுறைவீரர்கள் மொஹமட் நவாஸ், இமாட் வஸீம் ஆகியோர் வழங்குகின்றனர். பந்துவீச்சில், சிரேஷ்ட வீரர் உமர் குல், யசீர் ஷாவின் மீள் வருகையோடு மொஹமட் ஆமிரும் சேர்ந்து மிரட்டக் காத்திருக்கிறார்.

மறுபக்கம், 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண வெளியேற்றத்துக்குப் பின்னர் மிரட்டி வரும் இங்கிலாந்து அணிக்கு, தற்போதைய நிலையில் மிகப் பெரிய தலையிடியாய் அமைந்துள்ளது அணித்தலைவர் ஒயின் மோர்கனின் ஃபோர்மே ஆகும். தொடர்ந்து ஓட்டங்களைக் குவிக்கத் தடுமாறி வரும் மோர்கனுக்கான இறுதி வாய்ப்பு பெரும்பாலும் இத்தொடராகவே இருக்கும்.

மற்றையபடி, ஆரம்பத்தில் ஜேஸன் ரோய் அதிரடி முதல் மத்திய வரிசையில் ஜோ ரூட்டின் நிதானம், விக்கெட் காப்பாளர் ஜொஸ் பட்லரின் அதிரடி, பின்னர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் என வரிசையாக சகலதுறை வீரர்கள், பந்துவீச்சாளர்களிலும் அதிரடியாக ஆடும் லியாம் பிளங்கெட், கிறிஸ் ஜோர்டான், 11ஆவதாக வரும் அடில் ரஷீட் வரை துடுப்பெடுத்தாடக் கூடியவாறு மிரட்ட இங்கிலாந்து காத்திருக்கிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .