2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

பாண்டியா அதிரடிச் சதம்; 135 ஓட்டங்களுக்குச் சுருண்டு

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பல்லேகலவில் நேற்று முன்தினம் ஆரம்பமான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை தடுமாறுகிறது.

நேற்று முன்தினம் ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நேற்றைய இரண்டாம் நாளை 6 விக்கெட்டுகளை இழந்து 329 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்து, முதல் மணித்தியாலத்தில் 3 விக்கெட்டுகளை இழந்தபோதும், ஹார்டிக் பாண்டியாவின் அதிரடியான 108 ஓட்டங்களின் துணையோடு, தமது முதலாவது இனிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 487 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில், ஷீகர் தவான் 119, ஹார்டிக் பாண்டியா 108, லோகேஷ் ராகுல் 85 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லக்‌ஷன் சந்தகான் 5, மலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில், டினேஷ் சந்திமால் 48, நிரோஷன் டிக்வெல்ல 29 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், குல்தீப் யாதவ் 4, மொஹமட் ஷமி, இரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து, ஃபொலோ ஒன் முறையில் இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை, நேற்றைய ஆட்டநேர முடிவின்போது, ஒரு விக்கெட் இழப்புக்கு 19 ஓட்டங்களைப் பெற்று, இந்திய அணியின் முதலாவது இனிங்ஸை விட 333 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.

வீழ்த்தப்பட்ட விக்கெட்டை, உமேஷ் யாதவ் கைப்பற்றினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .