2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

றியோ ஒலிம்பிக்: ஜோக்கோவிச்சுக்கு மீண்டுமோர் அடி

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 09 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், பிரேஸிலில் இடம்பெற்றுவரும் றியோ ஒலிம்பிக்கின் தனிநபர் டென்னிஸ் போட்டிகளில், முதலாவது சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்தது கண்ணீருடன் விடை பெற்ற நிலையில், தற்போது ஆடவருக்கான இரட்டையர் போட்டிகளின் இரண்டாவது சுற்றிலும் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

சேர்பியாவின் ஜோக்கோவிச் மற்றும் 40 வயதான அவரது ஜோடியான நெனட் ஸிமொஞ்சிக் ஆகியோர், 6-4, 6-4 என்ற செட் கணக்கில் பிரேஸிலின் மார்செல்லோ மெலோ மற்றும் புரூனோ சோரஸ் ஜோடியிடம் தோல்வியடைந்துள்ளனர்.

29 வயதான ஜோக்கோவிச், விம்பிள்டன் தொடரிலும் அதிர்ச்சிகரமாக, மூன்றாவது சுற்றில் அமெரிக்கரான சாம் குவாரேயிடம் தோல்வியுற்றபோதும், ஒலிம்பிக்குக்கு முன்னர் தனது 30ஆவது மாஸ்டர்ஸ் பட்டத்தை கனடாவின் டொரன்டோவில் கைப்பற்றியிருந்தபோதும், தற்போது ஒலிம்பிக்கில் இறங்குமுகத்தை கண்டுள்ளார்.

இதேவேளை, போட்டியை நடாத்தும் நாடான பிரேஸிலுக்கு, ஒலிம்பிக் போட்டிகளின் மூன்றாவது நாளில் முதலாவது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான ஜூடோவின் 57 கிலோகிராம் பிரிவில் ரஃபெல்லா சில்வாவே பிரேஸிலுக்கு தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொடுத்திருந்தார். உலகின் முதல்நிலை வீராங்கனையான மொங்கோலியாவின் சுமியா டோர்ஜ்சுரேனைத் தோற்கடித்தே சில்வா தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த சில்வா, ஜூடோ தனது வாழ்க்கை என்றும், தான் சொந்த நாட்டில் போட்டியிடுவதை விரும்பியதாகவும், ஏனெனில் பார்வையாளர்கள் தன்னை உற்சாகப்படுத்தியமை தனக்குப் பெரிதும் உதவியாகத் தெரிவித்தார். தவிர, தான் பெற்ற பதக்கமானது, இந்த வாரத்தில் பிரேஸில் மேலும் பதக்கங்களை பெறுவதற்கு வழி வகுக்கும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, நியூஸிலாந்தை வெற்றி கொண்ட அவுஸ்திரேலிய பெண்கள் அணி, ஒலிம்பிக்கின் முதலாவது றக்பி செவின்ஸ் தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொண்டது. மூன்றமிடத்துக்கான போட்டியில், பெரிய பிரித்தானியாவை வெற்றி கொண்ட கனடா, வெண்கலப் பதக்கத்தை பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .