2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஸ்பானிய லா லிகா: வில்லாறியலை வென்றது பார்சிலோனா

Editorial   / 2019 செப்டெம்பர் 25 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வில்லாறியலுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா வென்றது.

இப்போட்டியின் ஆறாவது நிமிடத்தில் சக முன்களவீரரும் அணித்தலைவருமான லியனல் மெஸ்ஸியின் மூலையுதையை தலையால் முட்டிக் கோலாக்கிய பார்சிலோனாவின் முன்களவீரர் அன்டோனி கிறீஸ்மன், தனதணிக்கு ஆரம்பத்திலேயே முன்னிலையை வழங்கினார்.

அடுத்த ஒன்பதாவது நிமிடத்தில் கோல் கம்பத்திலிருந்து நீண்ட தூரத்திலிருந்து பார்சிலோனாவின் மத்தியகளவீரர் ஆர்தர் மெலோ பெற்ற அபாரமான கோல் காரணமாக தமது முன்னிலையை பார்சிலோனா இரட்டிப்பாக்கிக் கொண்டது.

இந்நிலையில், போட்டியின் 30ஆவது நிமிடத்தில் உபாதை காரணமாக களத்துக்கு வெளியே நீண்ட நேரம் லியனல் மெஸ்ஸி சிகிச்சை பெற்றிருந்தார்.

தொடர்ந்து முதற்பாதி முடிவடையும் தருணத்தில் கோல் கம்பத்திலிருந்து நீண்ட தூரத்திலிருந்து வில்லாறியலின் மத்தியகளவீரரான சன்டி கஸோர்லா பெற்ற கோல் காரணமாக போட்டியின் முதற்பாதி முடிவில் பார்சிலோனாவின் முன்னிலையை ஒரு கோலால் வில்லாறியல் குறைத்தது.

இந்நிலையில், இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் சக முன்களவீரர் உஸ்மான் டெம்பிலி மூலமாக லியனல் மெஸ்ஸி பிரதியிடப்பட்டிருந்த நிலையில், சன்டி கஸோர்லா கோல் கம்பத்தை நோக்கிச் செலுத்திய இன்னொரு உதையை பார்சிலோனாவின் கோல் காப்பாளர் மார்க்-அன்ட்ரே டியர் ஸ்டீகன் தடுத்திருந்ததுடன், பின்னர் பந்தானது வில்லாறியலின் முன்களவீரரான சாமுவேல் சுக்வுசேயிடம் செல்வதைத் தடுத்திருந்தார்.

பின்னர் போட்டியின் 76ஆவது நிமிடத்தில் சக முன்களவீரர் லூயிஸ் சுவாரஸை பார்சிலோனாவின் 16 வயதான முன்களவீரர் அன்சு ஃபாட்டி பிரதியிட்டு, கோல் கம்பத்துக்கு சற்று வெளியே தனது உதையொன்றைச் செலுத்தியிருந்ததுடன், போட்டியின் இறுதிக் கணங்களில் அவர் விழ பெனால்டி கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .