2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கொக்கட்டிச்சோலை விவகாரம்: 13பேர் கைது

Thipaan   / 2014 ஓகஸ்ட் 14 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் இடம் பெற்ற பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதல் தொடர்பில் இதுவைர மூன்று பெண்கள் உட்பட 13 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சிரங்குடா பனை அறுப்பான் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை(12) இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இந்த 13பேரும் சந்தேகத்தின் பேரில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(13) ஏழு பேரும் இன்று(14)வியாழக்கிழமை ஆறுபேரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் புதன்கிழமை பாலிப்போடி குணசீலன், மற்றும் தேவநாயகம் கோவிந்தராசா, மாணிக்கம் தவமலர், வேல்முருகு ஜெகரன், வேல்முருகு டிலக்ஜன், வேல்முருகு வல்லியம்மை, வேல்முருகு சுகர்சினி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் வேல்முருகு ஜெகரன், வேல்முருகு டிலக்ஜன், வேல்முருகு வல்லியம்மை, வேல்முருகு சுகர்சினி ஆகிய நான்கு பேரும் மட்டக்களப்பு போனதா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே போன்று வியாழக்கிழமை சகாநாதன் ஜம்போகரன், தர்மலிங்கம் தங்கவடிவேல், சகாதேவன் ஜெயகரன், வெள்ளத்தம்பி சதாசிவம் பாக்கியராசா யோகரசா உட்பட ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் புதன்கிழமை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய சந்தேக நபர்களையும் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சிரங்குடா பனைஅறுப்பான் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை(12) இரவு கள்ளச்சாரயம் விற்பனை செய்வதாக கூறப்படும் வீடொன்றை பொலிஸார் சோதனையிட சென்ற போது அங்கு பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், ஏழு பொலிஸார் உட்பட 11பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X