2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

போராளியென குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுதலை

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 22 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

தமிழீழ விடுதலைப்புலிகளிடம் ஆயுதப்பயிற்சி பெற்றவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு கடந்த ஏழு வருடகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த பதுளையை சேர்ந்த ஒருவரை வழக்கில் இருந்து மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் விடுவித்துள்ளது.

பதுளையை சேர்ந்த கந்தசாமி தவராஜன் (44வயது) என்பவர் 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இது தொடர்பிலான இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் குற்ற வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு எதிரியின் சார்பில் சட்டத்தரணி கிருத்திகா முத்துராஜாவால் வழக்காடப்பட்டுவந்தது.

அந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் குறித்த சந்தேக நபர் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து ஆயுதப்பயிற்சி பெற்றதுடன் படையினருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணைசெய்த மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி பி.சசிமகேந்திரன், குற்றமூல ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக்கொண்டு உதவி பொலிஸ் அத்தியட்சர் உட்பட ஏனைய இரண்டு சாட்சிகளை நெறிப்படுத்தி குறித்த வழக்கினைக்கொண்டு நடாத்தியிருந்தபோதும் குறித்த குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் எதிரியால் சுயமாக வழங்கப்படவில்லை என்பதுடன் சட்டத் தேவைப்பாடுகளுக்கு அமையவும் பதியப்படவில்லை என்ற அடிப்படையில் குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்து இக்குற்றச்சாட்டுகளில் இருந்து எதிரியை விடுதலை செய்திருந்தார்.

இதேபோன்று குறித்த எதிரிக்கு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைக்கொண்டு கல்முனை மேல்நீதிமன்றில் ஆறு வழக்குகளும் யாழ் மேல்நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து எதிரியை விடுதலை செய்துள்ளதால் ஏனைய வழக்கில் இருந்தும் விடுதலைசெய்யப்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக சட்டத்தரணி கிருத்திகா முத்துராஜா தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .