2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

எந்தவொரு அரபுக்கல்லூரியிலும் வன்முறைகள் போதிக்கப்படுவதில்லை: பசீர் சேகுதாவூத்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 08 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


எந்தவொரு அரபுக்கல்லூரியிலும் வன்முறைகள் போதிக்கப்படுவதில்லை. ஆனால் வெளிநாட்டுச் சக்திகள் அரபுக்கல்லூரிகள் ஆரம்பிக்கப்படுகின்றபோது, அதை வன்முறைகள் கற்பிக்கும் இடமாக பார்க்கின்றனரென முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

காத்தான்குடியிலுள்ள மஃஹதுஸ் ஸுன்னா அந் நபவிய்யா மகளிர் அரபுக்கல்லூரிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பிறப்பாக்கியும் (புறஜக்டர்) அதனுடன் தொடர்புடைய உபகரணங்களையுத் தனது நிதியொதுக்கீட்டில் வழங்கிவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'வெளிநாட்டுச்சக்திகள் அரபுக்கல்லூரிகளை வன்முறைக்கான ஒரு இடமாக சந்தேகப்பார்வையுடன் பார்க்கின்றனா.; எந்தவொரு அரபுக்கல்லூரியிலும் வன்முறைகளை கற்பிப்பதில்லை. இன்று மத நல்லிணக்கத்துக்கான சவால் ஏற்பட்டுள்ளது.

இன்று மிக மோசமான மதப்பிளவுகள், வன்முறைகள் ஏற்பட்டுவருகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் மத நல்லிணக்கமென்பது அவசியமாகும். இதற்கு நல்ல உதாரணமாக நாம் மியன்மாரை பார்க்கமுடியும். அதேபோன்று பங்களாதேஷ் நாட்டில் மதத்திற்கு எதிரான ஆக்கிரமிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. இன்று தென்கிழக்கு ஆசியாவில் மதங்களுக்கான அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதை நம்மால் அவதானிக்க முடியும். இந்தியாவில் அசாம் மாநிலத்தில் மிக மோசமான மதவன்முறை இடம்பெற்றது. இன்னும் இந்தியாவில் 3 கோடி முஸ்லிம்கள் இவ்வன்முறைகளினால் அகதிகளாகவே உள்ளனர்.

பிராந்தியத்தில் மத சர்ச்சைகள் ஏற்பட்டுக்கொண்டே வருகின்றன. பல நாடுகளுடன் நமது இலங்கை நாட்டை எடுத்துக்கொண்டால் இங்க நமது நாட்டில் மத வன்முறைகள் குறைவாகும். இதனால் தான் மத நல்லிணக்கத்திற்கான தேவை அவசியமாகின்றது. இஸ்லாம் மார்க்கத்தை சரியாக கற்றுக்கொண்டு இன்று உலமாக்கள் அவற்றை சரியாக கற்றுக்கொடுக்கின்றனர். இன்று மதீனா மற்றும் எகிப்து போன்ற நாடுகளுக்கு நமது உலமாக்கள் சென்று அரபுமொழியில் சரியாக கற்றுக்கொண்டு சரியாக புரிந்து அவற்றை சரியான முறையில் சொல்லும் நிலைமை உருவாகியுள்ளது.

இவ் அடிப்படையில்தான் மகளிருக்கான அரபுக்கல்லூரிகளும் முக்கியமாகும். இச்சமூகத்தில் பெண்கள் மார்க்க கல்வியை சரியாக கற்றுக்கொள்கின்ற ஒரு இடமாக மகளிர் அரபுக்கல்லூரிகளுள்ளன. இம்மகளிர் அரபுக்கல்லூரியும் சிறந்த ஒரு கல்லூரியாகும் இதன் வளர்ச்சிக்கு என்னாலான உதவிகளை எதிர்காலத்திலும் வழங்குவேன்' என்றார்.

இம்மகளிர் அரபுக்கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சி.எம்.றிழ்வான் மதனி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அதன் செயலாளர் எம்.ஐ.எம்.மாஹீர், அதன் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.சி.எம்.செயினுலாப்தீன் மதனீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0

  • தம்பாளை பாபு Monday, 08 October 2012 10:27 AM

    இலங்கையில் மத வன்முறைகள் குறைவு என்றால் தம்புள்ள,தெஹிவளை, பொரள்ள போன்ற இடங்களில் என்ன நடைபெறுகின்றது.அங்கு நடைபெறுவது மத நல்லிணக்க ஊர்வலங்களா. எதிர்வரும் 31க்குப் பின்னர் தம்புள்ளவில் என்ன நடக்கப் போகின்றது.அடுக்கு மொழியில் பேசிக் கொண்டிருக்கும் போதே எல்லாம் முடிந்து விடும் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .