2026 மே 06, புதன்கிழமை

'கூட்டமைப்பு முரண்பட்டு நிற்பது வரலாற்றுத் துரோகமாகும்'

Kanagaraj   / 2013 மே 02 , பி.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முரண்பட்டு நிற்பது தமிழ்த் தேசியத்திற்குச்  செய்யும்  வரலாற்றுத்  துரோகமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

ஐந்து கட்சிகள் கூட்டாக இணைந்து உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் குழப்பங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தமிழரின்  அஹிம்சை வழி அரசியல் போராட்டம் அறுபது ஆண்டுகால  வரலாற்றையும் அதனூடான ஆயுதவழி அரசியல் போராட்டம் முப்பது ஆண்டுகால வரலாற்றையும் கொண்டுள்ளது.

ஆணிவேர் அவர்களே!

இந்தப் போராட்டத்தின் வலியும்,வேதனையும், சுமையும் தாக்கமும் தம்மை அர்ப்பணித்த தமிழ்  மக்களுக்கே  அதிகமாக புரியும். ஏனெனில் போராட்டத்தின் ஆணிவேர் அவர்களே!

தமிழர்களைப் பொறுத்த மட்டில் ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு தனிநபரும் போராட்டத்திற்கு தன்னாலான பங்களிப்பை  ஏதோஒரு வகையில் செய்துள்ளனர். ஆயுத போராட்ட காலத்தில் விலைமதிக்க முடியாத  தமது உயிர்களை இப் போராட்டத்திற்கு வலுசேர்ப்பதற்காக அர்ப்பணித்து உரம் ஊட்டி  வளர்த்தனர்.

குழிதோண்டிப் புதைப்பதற்கு சமனாகும்

இப் போராட்டத்துடன் சம்மந்தம் இல்லாத ஒருசிலர் தமிழ் மக்களுக்கு தமிழர்களின் அரசியல்  தொடர்பாக  கதை சொல்வது  தமிழர்  போராட்ட வரலாற்றை குழிதோண்டிப் புதைப்பதற்கு சமனாகும்.

போராட்ட  காலத்தில்  உயிரை காப்பதற்காக புகலிடம் கோரிபுலம் பெயர்ந்துவெளிநாட்டு வாழ்க்கை முறையை விரும்பியோ, விரும்பாமலோ உள்வாங்கிக்கொண்ட பலர் போராட்டத்தின் வலிகளை உணர்வோடு சுமந்து இன்றுவரை நிற்பதுதான்  இப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்து நிற்கும் வரலாறு ஆகும்.

இதேவேளை ஒருசிலர் இதற்கு மாறாக இனவாத அரசின் எடுபிடியாக செயற்ப்பட்டு தங்கள் வாழ்க்கைத் தரத்தை எப்படியோ உயர்த்தியும் தனது சொந்த நலனுக்காக அரசியலில் அறிமுகமாகி அபிவிருத்தியை  தமிழர் உரிமையென கருதி தமிழ் அரசியல் இனவாதம் பேசி கிழக்கில் ஒரு இனகலவரத்தை எற்படுத்த ஒருசிலர் பாதுகாப்புத் தரப்பின் உதவியுடன் செயற்படுகின்றனர்.

சவாலாகவே கருதவேண்டி உள்ளது


இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சித் தேர்தல்கள் ஊடாக, மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்ய முயற்சிக்காமல் அரச அதிகாரத்தால், நியமனம் செய்யப்படுவது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விடப்படும் சவாலாகவே கருதவேண்டி உள்ளது.

அரசு இத்தகைய நடவடிக்கையை கிழக்கில் மேற்கொள்ள முயற்சித்தால்  தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கிழக்கிலும் தனது ஜனநாயகப் போராட்டத்தை ஆரம்பிக்கத்தூண்டப்படும். இதற்கு எமது தமிழ் மக்கள் தற்கபாடம் கற்பிப்பர்.

தந்திரோபாய சதித்திட்டம்

இந்த நிலையில் வடமாகாணத்தேர்தல்  அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் தமிழ்அரசியல் ஒற்றுமையை சிதைக்கும் வன்முறைச்செயற்பாடுகளும் இராணுவ மேலாதிக்கமும், அமைச்சர்களின் கூற்றும் மத்திய அரசின் அண்மைக்கால திட்டமிட்ட செயற்பாடுகளும் வடக்கு மாகாணத்தில் ஏதோவொரு வகையான, மறைமுக தந்திரோபாய சதித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்போவதாக புலப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக  இருந்தும் போராட்டம் காரணமாக தமிழர்களின் இனப்பரம்பல் வீழ்ச்சி கண்டுள்ளன. இதனால் ஏனைய சமூகத்தினரின் இனப்பரம்பல் தமிழ்சமூகத்திற்குச் சமமாக மாக உயர்வடைந்துள்ளது.

அடையாளம் கேள்விக்குறியாகி உள்ளது

தமிழர்களின் அரசியல் சமூகபொருளாதார கட்டமைப்புக்கள் சிதைவடைந்துள்ளன. கல்வி தொழில்வாய்ப்பு நிலவரம் மிகமோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளன. கலையும், பண்பாடும் சீரழிந்துள்ளன. தமிழத்;தேசியத்தின் அடையாளம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழரின் நிருவாகப்பலமும், அபிவிருத்திக்கான நிதிஒதுக்கீடும் பலவீனம் கண்டுள்ளதோடு, குறைக்கப்பட்டும் உள்ளன. திட்டமிட்டுத் தமிழரின்  ஓற்றுமை சிதைக்கப்பட்டுள்ளது.

ஆயினும், கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்மக்களின் விழிப்புணர்வு காரணமாக இயன்றளவு தமிழர் ஒற்றுமைப்பட்டு தேர்தலுக்கு முகம் கொடுத்தும் அரசியல் சாதகத்தன்மையை பெறமுடியவில்லை.

காற்றுவீச ஆரம்பித்துள்ளது

இதற்கு மூலகாரணமாக அரசின் மறைமுகத்  திட்டமே இருந்து வருகின்றது. இது இனவாத அரசிற்கு கிடைத்த வெற்றியாகும். இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக, மனிதஉரிமைமீறல் தொடர்பாகவும்,  எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்  தொடர்பாகவும்,  அரசியல் அதிகாரங்கள் தொடர்பாகவும், சர்வதேச ரீதியாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தமிழ்மக்களை நோக்கி சாதகமான காற்றுவீச ஆரம்பித்துள்ளதை எடுத்துக் காட்டுகின்றது.

 கூட்டமைப்பு வலு உள்ளதாக மாறவேண்டும்

இத்தகைய சூழலில்  மேல் குறிப்பிட்ட சாதகமான நிலைகளை பயன்படுத்துவதற்கும், சவால்களை முறியடிப்பதற்கும், வெற்றிகொள்வதற்கும் தமிழத்தேசியக் கூட்டமைப்பு வலு உள்ளதாக மாறவேண்டும்.

கடந்த 12 வருடங்களாக தேர்தலுக்கு முகம்கொடுத்த தமிழத்தேசியக் கூட்டமைப்பானது பல நெருக்கடி நிலைகளுக்கப்பால் தியாகங்களை அற்பணிப்போடு செய்திருக்கின்றது. இவைகளில் வெற்றியும் கண்டுள்ளது. இதை  யாரும் மறுப்பதற்கில்லை.
இதேவேளை,  இதற்குள்  உள்வாங்கப்பட்ட  கட்சிகள் பல விட்டுக்  கொடுப்புகளையும்  செய்து  வந்ததன்  ஊடாகத்தான்  தமிழ்த்தேசியம்  பலம்  அடைந்தது என்பது யதார்த்தமாகும்.

பிடிவாதத்தை கைவிடவேண்டும்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள்  ஏற்ப்பட்டிருக்கும் உண்மையான, நியாயமான கருத்து முரண்பாடுகளை விட்டுக்கொடுத்து, பேசித்தீர்த்து, தமிழரசுக்கட்சியின் ஒருசில மூத்த உறுப்பினர்கள் தனியாக செயற்படவேண்டும் என்ற பிடிவாதத்துடன் முன்னெடுத்திருக்கும் கருத்தை கைவிட்டு ஒன்று இணைந்து  செயற்பட வேண்டிய அவசியத்தை மீளாய்வு செய்யவேண்டும்.

எனவே, கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பலமாக இருக்கவேண்டுமாயின் வடமாகாணம் தமிழர்களின் ஆளுகைக்கு உட்படவேண்டுமாயின் சர்வதேச ரீதியாக தமிழர்கள் பலத்தை நிரூபிக்க வேண்டுமாயின், பேச்சுவார்த்தையை பலமிக்கதாக கொண்டு செல்வதற்கு தமிழர்களின் ஒற்றுமை அவசியம்.

எனவே,  தமிழரசுக்கட்சி  தமிழர்களின்  ஒற்றுமையை  பலப்படுத்துவதற்கும் ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் சேர்ந்து தமிழ்த்தேசியத்தை பலப்படுத்த முன்வரவேண்டும். இந்த  ஒற்றுமை இல்லாது போனால் தேர்தலில் கிழக்குமாகாணத் தமிழர்களின் பிரதிநிதித்துவம், அதிகாரப்பரவலாக்கல் தொடர்பான பேச்சுவார்த்தையும் பெரிதும் பாதிக்கப்படும்.
இதற்கு முழுப்பொறுப்பையும்  தமிழ் தலைவர்கள்  ஏற்றுக் கொள்ளவேண்டும். தமிழர் ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  Comments - 0

  • சுதா Friday, 03 May 2013 02:50 AM

    இப்ப என்ன, கட்சி மாறப் போறியளோ? அதுக்குதான் இந்தளவு வியாக்கியானமுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .