-எஸ்.எம்.எம்.முர்ஷித்
பிரதி அமைச்சர் ஒருவரின் இணைப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பொதுமக்களிடம் உதவிகள் செய்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் இன்று சனிக்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்றப் பிரதேசமான மாஞ்சோலை கிராமத்தில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வீடு, மலசல கூடம் மற்றும் கிணறு போன்றவற்றை அமைத்துத் தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்று வந்துள்ளார். இவரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பொதுமக்களிடம் பணத்தினைப் பெற்றுக்கொண்ட இவர் வீடு கட்டுவதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் எதுவும் செய்யாமல் இன்று அது தொடர்பாக மாஞ்சோலைப் பிரதேசத்தில் கூட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட வேலையிலேயே இந் நபர் பொதுமக்களின் தகவலையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.