2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குருக்கள் மடம் புதைகுழியை அடையாளம் காட்டுவதில் முரண்

Gavitha   / 2014 செப்டெம்பர் 13 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடத்தில் 24 வருடங்களுக்கு முன்பு விடுதலைப்புலிகளினால் கடத்தி, படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம்களின் புதைகுழிகள் என கூறப்படும் இடங்களை அடையாளம் காட்டுவது தொடர்பில் முரண்பாடுகள் எழுந்துள்ளன.

இதனால், அந்த அகழ்வுப் பணிகள் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த நிபுணர்கள் குழு, எந்தவொரு தீர்மானமும் இன்றி கொழும்பு திரும்பியது.

மட்டக்களப்பு - குருக்கள்மடம் மனிதப் புதைகுழி இருக்கும் என இனங்காணப்பட்ட பகுதியை நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று சனிக்கிழமை (13), கொழுப்பிலிருந்து வந்த சட்டவைத்திய அதிகாரிகள் குழு பார்வையிட்டுள்ளதுடன்,  இப்புதைகுழி அமைந்துள்ள சரியான இடத்தை நீதிமன்றத்தனூடாக அடையாளப்படுத்துமாறு முறைப்பாட்டாளருக்கு ஆலோசனை வழங்கிச் சென்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை  கடந்த 18.08.2014 அன்று தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழ், கடந்த ஜூலை 01ஆம் திகதி களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இருந்த போதிலும், சட்ட வைத்திய நிபுணர்குழு அன்றயதினம் உரிய இடத்துக்கு வருகை தராததையடுத்து எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி தோண்டுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதற்கிணங்க இன்று சட்ட வைத்திய நிபுணர் அஜித் தென்னக்கோன் தலைமையில் சட்ட வைத்தியர்களான சி.கே.இராஜகுரு, கீர்த்தி குணரெத்தின, அஜித் ஜெயசேகர, வைத்தியரெத்ன, உத்கல ஆட்டிக்கல, சியந்த அமரரெத்தின, பந்துல அமரசேகர, மற்றும் மண்பரிசோதனை நிபுணர் பேரசிரியர் நந்தசேன, தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோர் கொண்ட குழு அவ்விடத்தில் இன்றைய தினம் பிரசன்னமாகியிருந்தனர்.

இதேவேளை ,அவ்விடத்தில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, களுவாஞ்சிகுடி பிரதேச உதவிப் பொலிஸ் அதியட்சகர் எகலவெல, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், முறைப்பாட்டாளரான காத்தான்குடி நகரசபை உறுப்பினர் றவூப் ஹாஜியார் உட்பட பலர்  பிரசன்னமாகியிருந்தனர்.

குருக்கள்மடம் கடற்கரைப் பிரதேசத்தில் இரண்டு பக்கமும் 2 இந்து மயானங்கள் இருந்தன. அதில் இந்துக்களின் உடல்கள் இந்து சமய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டுள்ளன. புதைகுழி தோண்டும்போது எமது உறவுகளின் உடல்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் செயற்பட வேண்டும் என அங்கு பிரசன்னமாகியிருந்த வைத்திய குழுவிடமும் பொலிஸ் அதிகாரிகளிடமும் குருக்கள்மடம் இந்து இளைஞர் மன்றத் தலைவர் எஸ்.சுதர்சனன் வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே அவ்விடத்துக்கு வருகை தந்திருந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கும் முறைப்பாட்டாளரான காத்தான்குடி நகரசபை உறுப்பினர் றவூப் ஹாஜியாருக்கும் இடையில், இப்புதைகுழி தோண்டுவதை முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலும் உரிய இடத்தை அடையாளப்படுத்துவது தொடர்பிலும் அவ்விடத்தில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

இதன் போது கருத்து சட்ட வைத்திய நிபுணர் அஜித் தென்னக்கோன், குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பாக களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இவ்விடத்தினைப் பார்வையிட வந்துள்ளோம். இங்கு வந்து பார்த்த போதுதான் முஸ்லிம் மக்களிடத்திலும் இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளதென்பதையும், தமிழ் மக்கள் சார்பில் குருக்கள்மடம் கிராமத்திலுள்ள இந்து அமைப்பு ஒன்றும் இப்பகுதியில் இரண்டு இந்து மயானங்கள் இருந்ததாகவும் தெரிந்துகொண்டோம்.

இப்பகுதியில் 6 அடி தோண்ட வேண்டும் என சொல்லப்படுகின்றது. ஆனால் 6 அடி தோண்டமுடியாது 6 தோண்டினால் நிலத்திலிருந்து நீர் வந்துவிடும்.

இதனை தோண்டுவதாக இருந்தால் நீதிமன்றத்தனூடாக பொலிஸார் மற்றும் பிரதேசசபையூடாக சரியான இடத்தை அடையாளம் காணவேண்டும். அப்போதுதான் இதனை தோண்ட முடியும் என சட்ட வைத்திய நிபுணர் அஜித் தென்னக்கோன் மேலும் தெரிவித்தார்.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X