2025 மே 19, திங்கட்கிழமை

தென்னைகளில் மைற்றாவின் தாக்கம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 22 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது  தென்னை மரங்களில் 'மைற்றாவின்' தாக்கம் அதிகரித்துள்ளதாக  மாவட்ட தென்னை அபிவிருத்திச்சபையின் திட்டமிடல் அதிகாரி பெருமாள் உதயச்சந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தெங்குச் செய்கை குறைவடைந்தமைக்கான காரணிகளில்  மைற்றா எனப்படும் பூச்சித்தாக்கமும் ஒன்றாகும். இந்தத் தாக்கத்தின் விளைவாக தென்னங் குலைகளில் காணப்படும் தேங்காய்களின் விளைச்சல் குறைவடைதுடன்,  குரும்பைகளும் உதிர்கின்றன.  

இது தெங்குச் செய்கைக்கு பெரிய சவாலாக இருந்துவருவதாகவும் அவர் கூறினார்.

இதைக் கட்டுப்படுத்துவதற்கு தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தினால் கந்தக பாம் எண்ணெய் கலவை முறையும் உயிரியல் கட்டுப்பாட்டு முறையும் பயன்படுத்தப்படுகின்றன.  பாம் எண்ணெய் கலவை முறையினூடாக தனித்தனியாக ஒவ்வொரு மரத்திலும் பாதிக்கப்பட்ட குலைகளுக்கு இக்கலவையை விசிறுவதன் மூலம் கட்டுப்படுத்தமுடியும்.

இதனை ஆறு மாதங்களுக்கு திரும்பவும் பாவிப்பதன் மூலம் இந்தத் தாக்கத்தை பெரும்பாலும் கட்டுப்படுத்த முடியும்.
ஆயினும், இக்கட்டுப்பாட்டு முறையில் செலவும் காலமும் அதிகளவு தேவைப்படுவதால் செலவு குறைந்த, காலத்தை வீணடிக்காத  உயிரியல் கட்டுப்பாட்டு முறையை தென்னை ஆராய்ச்சி நிறுவனம் சிபாரிசு செய்கின்றது.

வரட்சியான காலங்களில் 'மைற்றாவின்' தாக்கம் அதிகரிப்பதால், இக்காலப்பகுதியில் அதனைக் கட்டுப்படுத்துவது சிறந்ததாகும்.

உயிரியல் கட்டுப்பாட்டு முறையினூடாக பாதிக்கப்பட்ட நான்கு மரங்களுக்கு ஒரு மரம் என்ற வீதத்தில் பிரயோகிப்பதன் மூலம் 'மைற்றாவை' இலகுவாகக் கட்டுப்படுத்தலாம். அத்துடன், இம்முறையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பல தடவைகள் பாவிப்பதன் மூலம் தாக்கத்தை அதிகளவு குறைத்துக் கொள்ளலாம்.

மட்டக்களப்பு தென்னைப் பயிர்ச் செய்கைச் சபை ஆய்வு கூடத்தில் மைற்றாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான உயிரியல் இரை கௌவ்வி உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கிடப்படுகின்றது.

இலங்கையில் 'மைற்றாவுக்கு' எதிரான உயிரியல் இரைகௌவி உற்பத்தி செய்யும் ஆய்வுகூடங்களில் மட்டக்களப்பு தென்னைப் பயிர்ச் செய்கைச் சபையே முன்னணியில் உள்ளது. இதனூடாக உற்பத்தி செய்யப்படும் இரைகௌவ்வி பொதிகளை நாட்டின் பல பாகங்களுக்கு விநியோகிக்கக் கூடியதாகவுள்ளது.

தென்னைப் பயிர்ச் செய்கைச் சபை, மட்டக்களப்பில் ரூபாய் 15 ஐ செலுத்தி ஒரு இரை கௌவ்வி பையை கொள்வனவு செய்து பாதிக்கப்பட்ட நான்கு தென்னை மரங்களுக்கு பாவிக்கலாம் எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X