2025 மே 19, திங்கட்கிழமை

'சமுர்த்தி உத்தியோகஸ்தர்களுக்கு அநீதி இழைக்கப்படாது'

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

எந்தவொரு சமுர்த்தி உத்தியோகஸ்தர்களுக்கும் அநீதி இழைக்கப்படமாட்டாது என்று சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு தொகுதியிலுள்ள சமுர்த்தி உத்தியோகஸ்தர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம், மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் கௌரவமாக வழிநடத்தப்படவேண்டும் என்பதில் எமது அமைச்சர் சஜித் பிரேமதாச கவனமாக உள்ளார். சமுர்த்தி  நிவாரண முத்திரை வழங்குவதற்கு எந்தவொரு அரசியல் தலையீடும் கிடையாது. களத்தில் கடமையாற்றுகின்ற சமுர்த்தி உத்தியோகஸ்தர்களே தகுதியானவர்களை இனங்கண்டு அடையாளப்படுத்தி தகுதியானவர்களுக்கு சமுர்த்தி நிவாரண முத்திரைகள் வழங்கவேண்டும்.

சமுர்த்தி உத்தியோகஸ்தர்களுக்கு வறுமையான மக்களுடன் நேரடியாகப் பேசி அவர்களுக்கு உதவுகின்ற சந்தர்ப்பத்தை இறைவன் தந்துள்ளான். வறுமையில் நாளாந்தம் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உதவுகின்ற சந்தர்ப்பம் இதன் மூலம் சமுர்த்தி உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தெரிவை நேர்மையாக  இறைவனுக்கு பொருத்தமாக செய்ய வேண்டும். தகுதியற்றவர்களுக்கு சமுர்த்தி நிவாரண முத்திரைகள் வழங்க கூடாது. தகுதியற்றவர்களுக்கு சமுர்த்தி நிவாரண முத்திரைகள் வழங்குமாறு எந்தவொரு அரசியல்வாதியும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்களிடம் கோரியிருக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன்.

அரசியல்வாதிகளான எங்களிடத்தில் சமுர்த்தி கோரி யாராவது கடிதம் தந்தால், அதை நாங்கள் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருக்கு அனுப்பிவைக்கின்றோம். பணிப்பாளர் உங்களிடம் அந்த கடிதத்தை தருவார் அதை நீங்கள், அந்த பயனாளி தகுதியானவரா அல்லது  இல்லையா என்பதை பார்த்து வழங்க வேண்டும். சமுர்த்தி உத்தியோகஸ்தர்களுக்கு இது தொடர்பிலுள்ள பொறுப்புக்களை சரியாக செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் போன்றவைகளினால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுவர்களுக்கு உதவுகின்ற சந்தர்ப்பத்தை சமுர்த்தி உத்தியோகஸ்தர்களுக்கு தந்தது போன்று எனக்கும் இந்த சசந்தர்ப்பத்தை  இறைவன் தந்துள்ளான்.

இந்த மாவட்டத்தில் விதவைகளை அடையாளப்படுத்தி அவர்களுக்கு உதவுகின்ற அவர்களின் வாழ்வாதாரத்தை  முன்னேற்றுகின்ற வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவேண்டும். அரசாங்க வெளிக்கள உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், வழங்கப்படாதவர்களுக்கு  வழங்கப்படும்.  

சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் 7,000 வெற்றிடங்கள் நாடுபூராவுமுள்ளன. அதை நிரப்புவதற்காக சமுர்த்தி முகாமயாளர்களை நியமனம் செய்வதற்காக  அவர்கள் பட்டதாரிகள் என்பதற்காக நேர்முகப்பரீட்சை நடத்தி அவர்களை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பி.குணரட்னம், முகாமையாளர் ஏ.மனோகிதராஜ் உட்பட அதன் முகாமையாளர்கள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X