2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'சிறுபான்மை சமூகத்துக்கு பாதிப்பில்லாத தேர்தல் முறையை விரும்புகின்றோம்'

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

சிறுபான்மை சமூகத்துக்கு  பாதிப்பில்லாத தேர்தல் முறைமையை  தாம் விரும்புவதாக  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

20ஆவது தேர்தல் திருத்த சட்டமூலம் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

'இப்பொழுதுள்ள விகிதாசார தேர்தல் முறை என்பது குறித்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த மக்களின் ஜனநாயக கருத்துக்களை பிரதிபலிப்பதாக அமைந்தாலும், அதிலுள்ள விருப்பு வாக்கு முறை என்பது பல சர்ச்சைகளை கட்சிகளுக்குள்ளும் மக்களிடையேயும் தோற்றுவிப்பதை  யாரும் மறுக்கமுடியாது. அத்துடன், பல தொகுதிகளுக்கு  மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் போகும் நிலையும் காணப்படுவதாக மக்களால் சுட்டிக்காட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக, மட்டக்களப்பு தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக காணப்படும்போதும், 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்படவில்லை. கல்குடா மற்றும்  பட்டிருப்புத்தொகுதிகளுக்கு மட்டுமே நாடாளுமன்ற  பிரதிநிதித்துவம் கிடைத்தது.

இவ்வாறான சூழலில் மக்களின் அடிமட்ட தேவைகளை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லாது போகின்றனர். இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு தொகுதி ரீதியான மக்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதுடன்,  சிறு கட்சிகளும் சிறுபான்மையினக்  கட்சிகளும்  பாதிக்கப்படாத யாவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேர்தல் முறைமையையே நாம் எதிர்பார்க்கின்றோம்.

புதிய தேர்தல் வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால், அது தொடர்பாக ஆராய்ந்து முன்மொழிவுகள் செய்யவும் எமது கட்சி தயாராக உள்ளது' எனத்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .