2025 மே 16, வெள்ளிக்கிழமை

சிறுபான்மையினருக்கான சாபக்கேடாகவே ஆசிய நாடுகளின் பேரினவாதம் காணப்படுகிறது: பஷீர்

Menaka Mookandi   / 2015 மே 29 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பழுலுல்லாஹ் பர்ஹான்

ஆசிய நாடுகளில் தலைதூக்கியிருக்கும் பேரினவாதம், அந்நாடுகளில் வாழும் சிறுபான்மையினரைத் துரத்தும் ஒரு சாபக்கேடாக அமைந்துள்ளது என முன்னாள் உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சரும் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

நிர்க்கதியாய் நிற்கும் மியான்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையை தொடர்ந்து பிற்பகல் 1.15 மணியளவில் பெரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று ஏறாவூர் நகரின் கொழும்பு - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் இடம்பெற்றது. உயிரியல் உரிமைகளுக்கான எல்லையற்ற அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பின்வரும் எட்டு அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

1.  மேற்குலகே உனது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற, ரொஹிங்கியா முஸ்லிம்களை பலிக்கடாவாக்காதே!

2.   சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜனநாயகத் தலைவி ஆங் சாங் சூகி அம்மையாரே! உம் நாட்டு முஸ்லிம்களுக்கான உமது ஆதரவுக் குரல் எங்கே?

3.  மியான்மர் அரசே முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பை உடனே நிறுத்து!

4.  மியான்மர் துறவிகளே உங்கள் வேலை, மடங்களுக்குள்ளும் மக்களுக்குள்ளும் அறநெறிப் போதனை புரிவதா? கொலை பாதகம் புரிவதா?

5.  மலேசியா, இந்தோனேசியா, தாய்வான் அரசுகளே அரசுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுக்கு அப்பால் மனித உரிமைகளில் கவனம் செலுத்து!

6.   அறவு தேசமே உங்கள் திருட்டு மௌனத்தைக் கலைத்து அப்பாவி முஸ்லிம்களைக் காப்பாற்று!

7.  இலங்கை அரசே! மியான்மர் படுகொலைகளைக் கண்டனம் செய்!

8.  ஐக்கிய நாடுகளே! மியான்மர் நெருக்கடியில் அவசரத் தலையீடு செய்!

ஏறாவூர் முதலாம் குறிச்சி ஜும்மாப் பள்ளிவாசலில் இருந்து ஆரம்பமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலை வழியாக ஏறாவூர் நகரசபை வரையும் சென்றது. கண்டன ஊர்வலத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமாகிய பஷீர் சேகுதாவூத் தொடர்ந்து கருத்து தெரிவித்ததாவது,

'ரொஹிங்கியா முஸ்லிம்களின் இனப்படுகொலையும் திட்டமிடப்பட்ட இனச்சுத்திகரிப்பும் உலக முஸ்லிம்களுக்கு மிக முக்கியமான கற்றுக் கொள்ளும் பாடம் ஒன்றை உணர்த்தியிருக்கின்றது.

சமீபகாலமாக பேரினவாதம் என்பது வியாபித்து ஆசியா உள்ளிட்ட முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழுகின்ற எல்லா நாடுகளிலும் சிறுபான்மையினர் மீது அச்சுறுத்தல்களையும் வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டு அவர்களது வெளியேற்றத்தையும் காண்பிக்கின்றது.

ஆசிய நாடுகளில் வாழுகின்ற முஸ்லிம்களின் விடயத்திலே எல்லைப் பிரிப்பு என்பது மிக வஞ்சிக்கப்பட்ட வகையில் செய்து முடிக்கப்பட்டிருக்கின்றது.

அதனை அடியொற்றியதாகவே ஆசிய நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்கின்ற முஸ்லிம்கள் நாடற்றவர்களாக இனச்சுத்திகரிப்புச் செய்து வெளியேற்றப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையிலும் இத்தகையதொரு நெருக்கடி நிலைமை உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் வந்தேறுகுடிகள் என்று இங்கு வாழும் பேரினவாதிகள் கூச்சல் எழுப்புகின்றனர். பர்மிய முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுக் கொண்டு வருகின்ற கொடூரங்கள் இலங்கை முஸ்லிம்களுக்கும் ஒரு அனுபவப் பாடமாக அமைந்து விட்டது.

இதன்காரணமாக பூர்வீகமாக அந்தந்தப் பிரதேசத்திலே வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் நாடற்றவர்களாக வீடற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். பர்மாவிலும் (மியன்மார்) இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது.

பல இலட்சக் கணக்கான முஸ்லிம்கள் தமது பூர்வீகப் பகுதிகளிலிருந்து துரத்தப்பட்டு இந்து சமுத்திர ஆழ்கடலில் குடிநீருமின்றி சிறு நீரை அருந்துமளவுக்கு சவப்பெட்டிப் படகுகளில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இத்தகைய சூழ்நிலைகளில் மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பு ஆசியாவிலே சிறுபான்மையினராக வாழ்கின்ற எல்லா முஸ்லிம்களுக்கும் உண்டு. அரசியல் கலப்பில்லாத உயிரியல் உரிமைகளுக்கானஇந்த விடயத்திலே ஆழ்ந்த அக்கறையோடு இருக்கின்றது.

கீழைத்தேய முஸ்லிம் அறிஞர்கள், புத்திஜீவிகள், ஆய்வாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து இந்த அச்சுறுத்தல்களுக்கான தீர்வுகளைத் தேடக்கூடிய வகையில் வழிவகைகளைத் தேடவேண்டும்.

அடக்கி ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் உலகின் எப்பாகத்தில் வாழ்ந்தாலும் அவர்களுக்காக குரல் ஒங்கி குரல் கொடுப்பதில் இந்த ஏறாவூர் மண் பெருமையடைகிறது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .