2025 மே 16, வெள்ளிக்கிழமை

'கொலைகள் மட்டுமன்றி, துஷ்பிரயோகங்களும் போதை வியாபாரமும் நிறைந்துள்ளன'

Suganthini Ratnam   / 2015 ஜூன் 08 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

வடக்கு, கிழக்கில் கொலைகள் மட்டுமன்றி, பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்டவையும் நிறைந்து காணப்படுவதாக  இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவந்த சமூகசேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிதாயன்  (வயது 44)  மண்டூரிலுள்ள அவரது வீட்டில் வைத்து  இனந்தெரியாதோரினால்  கடந்த 26ஆம் திகதி  சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலையைக்  கண்டித்தும் இக்கொலையுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில்  இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மேற்படி சமூகசேவை உத்தியோகஸ்தர் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். சமூக முன்னேற்றதுக்காக, சமூக சீரழிவுகளுக்கு எதிராக உழைத்து  நன்மதிப்பை பெற்ற உயர்ந்த அதிகாரியாக அவர் திகழ்கின்றார்.

அவர் படுகொலை செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ளன. இருப்பினும், இக்கொலையுடன் தொடர்புடையவர்களை பொலிஸார் இன்னமும்  கைதுசெய்யாமலுள்ளமை  ஆச்சரியமாக உள்ளது' என்றார்.  

'மக்களின் எழுச்சியை தடுக்கவேண்டுமானால், சமூகசேவை உத்தியோகஸ்தரின் கொலையுடன் தொடர்புடையவர்களை  கைதுசெய்யுமாறு   வேண்டுகோள் விடுக்கின்றோம்' என்றார்.

இங்கு த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா உரையாற்றுகையில்,  'இப்படியான கொலைகள் நடைபெறுவதை நாங்கள் கண்டிக்கின்றோம்.  மண்டூரில் கடந்த 26ஆம் திகதி மேற்படி  உத்தியோகஸ்தர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்றால், இங்கிருக்கின்ற அரசியல்வாதிகள், அரச உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள் ஆகியோரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தல் சில வேளைகளில் இந்த நாட்டில் போர் இடம்பெற்ற காலத்தில் இருந்திருக்கலாம். 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்படியான அச்சுறுத்தல் நிச்சயமாக ஏற்படக்கூடாது. ஆனால்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .