2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கறுப்பு ஆசிரியர் தின பிரகடனம்; கிழக்கிலும் கவனயீர்ப்பு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 06 , பி.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம், ஏ.எம்.ஏ.பரீட், எஸ்.எம்.இர்ஷாத்

சர்வதேச ஆசிரியர் தினமான இன்று (06) கறுப்பு ஆசிரியர் தினமாக பிரகடனம் செய்து, நாட்டின் 312 கல்வி வலயங்களை மையப்படுத்தி, பாரிய கவனயீர்ப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளை, இலங்கை ஆசிரியர் சங்கம் மேற்கொண்டது.

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினை மற்றும் நாட்டிலுள்ள மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாத்தல் ஆகிய இரு பிரதான விடயங்களை முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்தக் கவனயீர்ப்புகள், கிழக்கு மாகாணத்திலும் பரவலாக முன்னெடுக்கப்பட்டன.

கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் அலுவலக முன்றலில் சுலோகங்களை ஏந்தி இஸ்லாமிய ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கவனயீர்ப்பை முன்னெடுத்தனர்.  

அத்துடன்,  அம்பாறை, சம்மாந்துறை வலயக் கல்வி முன்றல் மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய அலுவலகத்துக்கு முன்பும் அதிபர், ஆசிரியர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும், திருகோணமலை, கிண்ணியா வலய கல்வி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சம்பள முரண்பாட்டை நீக்கக் கோரி, வலய கல்வி அலுவலகத்துக்கு முன்னால் நேற்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள அதிபர்கள் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

மேற்படி கவனயீர்ப்புகளில் ஈடுபட்டவர்கள், அமைதியான முறையில், சமூக இடைவெளிகளை பேணி, முகக்கவசம் அணிந்திருந்தனர்.

கடந்த இரு வருடங்களாக சிறப்பாக ஆன்லைனில் கற்பித்து நல்ல பெறுபேற்றை பெற்றுக்கொடுத்துள்ளோம். போராட்டம் 86 நாள்கள் கடந்தும் தமது பிரச்சினைக்கு இதுவரை அரசாங்கம் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை எனவும் பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டுமாயின் அரசாங்கம் ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி தீர்வொன்றை பெற்றுத்தருமாறு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், அதிபர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .