2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இதுவரை தீர்வு இல்லை

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

போர் மௌனிக்கப்பட்டு 12 வருடங்கள் கடந்துள்ள போதும் வடக்கு, கிழக்கில் இருந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு இலங்கை அரசாலோ அல்லது சர்வதேசத்தாலோ எந்த ஆக்கபூர்வமான தீர்வும் கிடைக்கவில்லையென மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சி ஊடகச் செயலாளரும், பட்டிருப்புத் தொகுதி இலங்கை தமிழரசு கட்சித் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இன்றைய (ஓக.30) சர்வதே காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பாக அவர் மேலும் கருத்துரைக்கையில், “சர்வதேச காணாமல் போனோர் தினம் இலங்கையில் இன்று முன்னெடுக்கப்பட்டுகின்றது.

“இனங்காணப்படாத பகுதிகளில் தடுத்து வைத்தல், உறவினர்களுக்கு தெரியாமலோ, சட்ட ரீதியிலான காரணங்களுக்காகவோ கைது செய்யப்பட்டதன் பின்னர் காணாமல் போனவர்கள் குறித்து விளக்கமளிக்கும் நோக்கில், இந்தத் தினம் முன்னெடுக்கப்படுகின்றது.

“இலங்கையில் நடைபெற்ற 30 வருட கால யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் ஏராளமானவர்கள். இவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? என்று கூட தெரியாமல் அவர்களது உறவினர்கள் இன்று வரை தேடி வருகின்றனர்.

“இதற்காக நாள்களைக் கடந்து, வாரங்களைக் கடந்து, மாதங்களைக் கடந்து வடக்கு, கிழக்கில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுகின்றன.

“போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், பேரணிகள் என பல முயற்சிகளை முன்னெடுத்த போதும் இவர்களுக்கு இன்று வரை எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை.

“ஆட்சிகள் மாறினாலும் வட, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை. சர்வதேசத்தின் மூலமாகவும் நீதி பெறப்படாமல் தொடர்ச்சியான போராட்டங்களை எமது மக்கள் தினமும் செய்து கொண்டே உள்ளனர்.

“எனவே, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 44ஆவது கூட்டத் தொடர் நடைபெறுவதற்கு முன்னதாக சர்வதேச குற்றவியல் விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றமூடாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஒன்றினூடாகவோ நடத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் கூட்டத் தொடருக்கு முன்மொழிய வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.

“இனியும் காலம் கடத்தாமல், எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சரியான நீதி கிடைக்கவேண்டும் என்பதை இன்றய நாளில் மீண்டும் வலியுறுத்துவோம்” எனவும் மேலும் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .