2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

செல்வா வழியில் செல்ல தீர்மானம்

Editorial   / 2024 மார்ச் 16 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்ட தொடர்ந்து தமிழரசுக் கட்சியினர் ஓரணியில் ஒற்றுமையாக செயற்பட்டு தந்தை செல்வாவின் வழியில் செல்ல உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து  மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில்  வெள்ளிக்கிழமை (15) மாலை இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட கிளை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகள் குறித்து பல்வேறுவாதப்பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில் கட்சியினை ஒற்றுமையுடன் முன்கொண்டுசெல்வதற்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக கூட்டம் நிறைவுபெற்றதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி. சரவணபவன் ஆகியோர் இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்படி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இதன் போது தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை கடந்த காலங்களில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களை மறந்து ஓரணியில் செயற்பட தீர்மானித்துள்ளதாகவும், தேசிய ரீதியில் தமிழரசுக் கட்சிக்குள் எழுந்துள்ள செயலாளர் தெரிவு உள்ளிட்ட பிரச்சினைகளை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை கூட்டங்கள் நடைபெறும் போது அங்கு பேசி தீர்மானிப்பதாகவும் மாவட்ட கிளை என்ற அடிப்படையில் அனைத்து தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் ஓரணியில் திரண்டு ஒற்றுமையுடன் செயற்பட உள்ளதாக கூறினர்.

எதிர்வரும் காலங்களில் நடைபெற உள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வாவின் பிறந்தநாள் நிகழ்வுகள் மற்றும் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு தமிழரசுக் கட்சி புது உத்வேகத்துடன் செயற்பட உள்ளதாகவும், தமிழர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற கட்சி என்ற வகையில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சிக்கான ஆதரவை வழங்கி வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்றுவதற்காக அனைவரும் ஓரணியில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .