2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திராய்மடுவில் மட்டு. மாவட்டச் செயலகம்; ஓகஸ்ட் நடுப்பகுதியில் நிர்மாண வேலை ஆரம்பம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திராய்மடுப் பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துக்கான புதிய கட்டடத்தொகுதி நிர்மாணிப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய கட்டடத்துக்கான முதற்கட்ட நிர்மாண வேலை, 250 மில்லியன் ரூபாய் செலவில் இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.  

இது தொடர்பான கலந்துரையாடல் அரசாங்க அதிபர்; தலைமையில் மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (30) மாலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் மாநகர சபை அதிகாரிகள், பிரதேச செயலாளர், கட்டங்கள் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.  

2014ஆம் ஆண்டு, புதிய மாவட்டச் செயலகக் கட்டடத்தொகுதி அமைப்பது  தொடர்பான முன்மொழிவு, தேசிய திட்டமிடல் செயலகத்திலும் தேசிய வரவு -செலவுத்திட்ட திணைக்களத்திலும் அரசாங்க அதிபர் ஊடாக முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், 1,000 ரூபாய் மில்லியனுக்காக எதிர்பார்க்கப்பட்ட நிதி ஏற்பாட்டுக்கு இதற்கான திட்டம் வரையப்பட்டிருந்தது.

தேசிய திட்டமிடல் செயலகத்தின் சிபாரிசுடன் அமைச்சரவை அங்கிகாரம் பெறப்பட்டு, 2015ஆம், 2016ஆம் ஆண்டுகளில் பெறுகை நடைமுறைகள் பூர்த்திசெய்யப்பட்டு, தற்போது நிர்மாண வேலைக்கான ஒப்பந்தம்  கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மேலும், புதிய கட்டடத்தொகுதிக்கான நிர்மாண வேலை 02 வருட காலத்துக்குள் பூர்த்திசெய்யும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ளது. தற்போது மட்டக்களப்பு நகரில் வேறு வேறாக இயங்குகின்ற திணைக்களங்கள், இந்த புதிய கட்டடத்தொகுதியில் செயற்படும் என்பதுடன், ஒரே கூரையின் கீழ் சகல சேவைகளையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலகத்துக்கான புதிய கட்டடத்தொகுதிக்கான வடிவமைப்பை கட்டடங்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
தற்போது மாவட்டச் செயலகம் இயங்குகின்ற ஒல்லாந்துக் கோட்டைக் கட்டடத்தொகுதியானது, தேசிய தொல்பொருள்கள் திணைக்களத்துக்குச்  சொந்தமானதாக இருப்பதுடன், அக்கட்டடத்தில் திணைக்களகங்களுக்கான இடநெருக்கடி காணப்படுவதாலும் புதிய கட்டடத்தொகுதிக்கான தேவை உருவாகியிருந்தது. இந்த இட நெருக்கடி நிலைமை உருவாகியிருந்தபோது, 2014ஆம் ஆண்டு இதற்கான அனுமதியைப்; பெறுவதற்கான வேலை ஆரம்பிக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க, தற்போது மாவட்டச் செயலகம் இயங்குகின்ற ஒல்லாந்துக் கோட்டையானது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் புனரமைப்புச் செய்யப்பட்டு நூதனசாலையாக பேணுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகருக்கு வருகை தரும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தக் கோட்டையை சுற்றிப் பார்வையிடுவதில் ஆர்வம் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X