2025 மே 21, புதன்கிழமை

‘புதிதாக வணக்கஸ்தலங்களைக் கட்டுவதற்குஅனுமதி இல்லை’

பேரின்பராஜா சபேஷ்   / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மட்டக்களப்பு, கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவால் ஆராயப்படாமல், புதிதாக எந்தவொரு வணக்கஸ்தலங்களும் கட்டுவதற்கு அனுமதி வழங்க முடியாது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

“புதிதாக வணக்கஸ்தலங்கள் அமைப்பது தொடர்பான ஆராயப்பட்டு, அரச சுற்றுநிருபத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் இந்த விடயத்தில் பிரதேச கலாசார உத்தியோகத்தர் கவனமாக இருக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

கோறளைப்பற்று வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், வாகரைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (25) நடைபெற்றது.

இதில் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வாகரை, அம்மந்தனாவெளி கிராம சேவகர் பிரிவில் மத மாற்றங்கள் நடைபெறுவதாகவும் அனுமதியின்றி பிரசார நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கும் பிரதேச மக்களுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டு, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அந்த பிரதேச மக்களால் கருத்து முன்வைக்கப்பட்டது.

இதற்குப் பதிலக்கையிலேயே, யோகேஸ்வரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

“யாரும் எந்த மதத்தையும் பின்பற்ற முடியும். இது அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாரும் எந்த கடவுளையும் வழிபாடு செய்ய முடியும். ஆனால், ஏனைய மதத்தவருக்கு இடையூறு விளைவிக்காமல் கொச்சைப்படுத்தாமல் வழிபட முடியும்.

“வணக்கஸ்தலங்கள் பதியப்பட வேண்டும். பதியப்படாத வணக்கஸ்தலங்களை தடை செய்வதற்கு, பிரதேச செயலகத்துக்கு உரிமை உள்ளது. தற்போது 4 பேர் கூடி வணக்கஸ்தலமொன்றை உருவாக்குகின்றார்கள். இதனால் சமூகங்களிடையே பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இது மதப் பிரச்சினையில் ஆரம்பிக்கப்பட்டு, இனப்பிரச்சினையாக மாறுகிறது.

“மதமாற்றத்தை யாரும் தடுக்க முடியாது. சமூக ரீதியாக, சார்த்வீக ரீதியில் பிரதேச மக்கள் இணைந்து, மதமாற்றத்தைத் தடுக்கும் வகையில் பிரசாரம் மேற்கொள்ள முடியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .