2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பெண்ணின் சடலத்தை மீட்கச் சென்ற பொலிஸ் அதிகாரியும் உயிரிழப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காட்டு யானை தாக்கி உயிரிழந்த பெண்ணொருவரின் சடலத்தை மீட்பதற்காகச் சென்ற ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், நேற்று (17) இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் - திகிலிவெட்டை கிராமத்தில், காட்டு யானை தாக்கியதில், இரண்டு பிள்ளைகளின் தாயான முத்துலிங்கம் நிரஞ்சலா (வயது 31) என்பவர், ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவர், தனது வீட்டிலிருந்து 50 மீற்றர் துருத்திலுள்ள தனது மாமியாரின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, புதருக்குள் இருந்து வெளிவந்து, திடீரென வழிமறித்த காட்டு யானை, இவரைத் தாக்கியுள்ளது.

மாமியாரின் வீட்டுக்குச் சென்றவர் அங்கு வந்து சேரவில்லை என்பதால் உறவினர்கள் தேடியபொழுது அவர் காட்டுப் பாதையில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி இறந்திருப்பது தெரியவந்தது.

சம்பவத்தைக் கேள்வியுற்றதும்  ஏறாவூர் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள், காட்டு யானையின் தாக்குதலுக்குப் பலியான பெண்ணின் சடலத்தை மீட்பதற்காகச் சென்றிருந்தனர்.

அவ்வேளையில், சடலத்தைப் பார்வையிட்ட பொலிஸ் உத்தியோகத்தரான இரண்டு பிள்ளைகளின் தந்தையான நிதிய துரைலாகே லக்ஷ்மன் குமார ராஜபக்ஷ (வயது 37) எனும் பொலிஸ் உத்தியோகத்தர் மயங்கி வீழ்ந்துள்ளார்.

சக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் அவரை மீட்டு, அருகிலுள்ள சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்குக் எடுத்துச் சென்றபோதும் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.

இருவரினதும் சடலங்கள், உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X