2025 மே 21, புதன்கிழமை

பெருந்தொகை சட்டவிரோத சிகரெட்கள் கைப்பற்றல்

Editorial   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், நடராஜன் ஹரன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடியில் நேற்றிரவு ஒருதொகை வெளிநாட்டு சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளனவென, பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்களை விற்பனை செய்வதில் ஈடுபட்ட ஒருவரைக் கைது செய்ததோடு, சிகரெட் விநியோகத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் உட்பட சிகரெட்களையும் கைப்பற்றியதாகத் தெரிவித்தனர்.

36 பொதிகளில் உள்ளடக்கப்பட்டிருந்த 360 பக்கெற் உயர் ரக வெளிநாட்டு 'கோல்ட் லீப்' எனப் பெயர் பொறிக்கப்பட்ட சிகரெட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டன.

இவற்றின் உள் ளூர் சந்தைப் பெறுமதி சுமார் மூன்றரை இலட்ச ரூபாய் மதிப்பு உள்ளதாகும் எனத் தெரிவித்த பொலிஸார், இதற்கான தண்டப்பணமாக குறைந்தபட்சம் ரூபாய் 10 இலட்சம் விதிக்கப்படலாம் என்றனர்.

காத்தான்குடியை – 5, பிரிவைச் சேர்ந்த அப்துல் நழீம் மொஹமட் ருஷ்மி (வயது 40) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் பரிசோதகரும் பொலிஸ் பொறுப்பதிகாரியுமான சிந்தக பீரிஸின் நெறிப்படுத்தலின் கீழ், ஏறாவூர் குற்றத் தடுப்புப் பொ‪லிஸ் பொறுப்பதிகாரி நிரோஷன் பெர்ணான்டோ, புலனாய்வு பொலிஸ் உத்தியோகத்தர்களான டபிள்யூ.ஏ.கே. மங்கள குணசேகர மற்றும் கலீல் முஹம்மத் இம்ரான் ஆகியோரே இந்த சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட் விநியோகஸ்தரைக் கைது செய்ததோடு, அவர் வசமிருந்த மோட்டார் சைக்கிள், சட்டவிரோத சிகரெட்கள் என்பனவற்றையும் கைப்பற்றினர்.

சந்தேக நபரை, ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .