2025 மே 21, புதன்கிழமை

‘வட்டார பிரதிநித்துவமுறை மூலம் உள்ளூராட்சி மன்றங்களை மேம்படுத்தலாம்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஒக்டோபர் 02 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வட்டார பிரதிநித்துவமுறை மூலம் தெரிவுசெய்யப்படுகின்ற பிரதிநிதிகளைக்கொண்டு, உள்ளூராட்சி மன்றங்கள் அதனுடைய சேவைகளை மேம்படுத்துவதற்கான நடைவடிக்கைகளை எதிர்காலத்திலே மேற்கொள்ள முடியும்” என, மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல் தெரிவித்தார்.

செங்கலடியில் புதிய  பொதுச்சந்தைக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர் எஸ். பேரின்பராஜா தலைமையில், நேற்று (01) நடைபெற்றது.

46 இலட்சம் ரூபாய் செலவில் அமையப் பெறவுள்ள இக்கட்டடத் தொகுதிக்கான அடிக்கல்லை, மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல் மற்றும் ஏனைய அதிகாரிகளும் இணைந்து நாட்டி வைத்தனர்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சித்திரவேல்,

“ஏறாவூர்பற்று பிரதேச சபைப்பிரிவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் வருமானத்தை ஈட்டித்தருவதும் செங்கலடி பொதுச்சந்தையாகும். இதிலே நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் தங்களது வர்த்தகத்தைச் செய்து வருகின்றார்கள்.

“அந்த வகையிலே மிகவும் வசதிகுன்றிய நிலையில் காணப்பட்ட இச் சந்தைக் கட்டடத்தொகுதியில் மரக்கறி வியாபாரிகள் நிலத்திலே பரப்பியவாறு மரக்கறிகளை விற்பனை செய்வதைக்கண்டு அது எமக்கு சுகாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதையும் கருத்திற்கொண்டு கட்டடத்தை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கையின் ஆரம்பமாக இப்பொழுது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

“இப்போது எமது நாட்டிலே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற விடயம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பானது.

“கடந்த காலங்களில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தல்கள் நடைபெற்றன. இந்த முறையின் கீழ் அந்தப்பகுதியினுடைய மக்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே ஒரு நீண்ட இடைவெளி காணப்படுவதை கருத்திலே கொண்டு அடுத்த முறை நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி  தேர்தலானது வட்டார முறையிலே அமைப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்து அதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

“எனவேதான் அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் வட்டார முறையிலும் விகிதாசார பிரதிநிதித்துவம் கலந்த முறையிலும் நடைபெறவிருக்கின்றது.

“உள்ளூராட்சி என்று சொல்லப்படுகின்ற நிறுவனங்களானவை ஏனைய நிறுவனங்களைப்போல அல்லாது, தாமாகவே தமது நிதிகளைச் சம்பாதித்து அவர்கள் எவ்வளவு அதனுடைய பெறுமானத்தை வருமானமாக ஈட்டிக்கொள்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வரவு - செலவுத் திட்டங்களைத் தயாரித்து, அவர்களுக்குரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .