2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பெருந்தோட்டத்துறை வீழ்ச்சியடைந்து வருகிறது: திகா

Kogilavani   / 2015 ஜூலை 10 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

'பெருந்தோட்டத்துறையில் தொழிலாளர் படை குறைவடைந்து வருவதால் தேயிலை தொழில்துறை சரிவை நோக்கி பயணிக்கிறது' என தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பர் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

சமூக அபிவிருத்தி நிறுவகம், சுயிஸ் தொழில் உதவி நிறுவனம் இணைந்து தேயிலையின், யுடிஇசெட் தரச்சான்றிதழை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'இருநூறு வருட வரலாற்றை கொண்ட இலங்கைத் தேயிலை தொழில்துறையின் பின்னணியில் ஒரு மக்கள் சமூகம்; இலங்கையில் வாழ்ந்து வருகிறார்கள். தேயிலையையும் அந்த மக்களையும் பிரித்து பார்ப்பது என்பது கடல்நீரில் இருந்து உப்பை பிரித்துப் பார்ப்பதற்கு ஒப்பானது.

உலகம் முழுவதும் தேயிலைத் தொழில்துறையின் பின்னணியில் ஒரு மக்கள் சமூகம் உழைப்பாளர் சமூகமாக வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக இலங்கையில் மத்திய மலை நாட்டில், இந்த உழைப்பாளர் சமூகம் இலங்கைக்கு தேயிலையைக் கொண்டு வந்த பிரித்தானியர்களால், கூலிகளாகவே அழைத்து வரப்பட்டவர்கள்.  

இன்று தங்களை 'மலையக மக்கள்' என அடையாளப்படுத்தும் இவர்களில் தொழிலாளர்படை குறைவடைந்துகொண்டு வருகின்றது. இதனால், பெருந்தோட்டத் தேயிலைத் தொழில்துறையும் சரிவை நோக்கியே பயணிக்கிறது. காரணம், இந்த மக்களின் உழைப்புக்கு ஏற்றத் தொழிலாக இந்தத் தொழில்துறை அமையவில்லை. இன்றும் கூட 'நாட்கூலி' முறையிலேயே இவர்களுக்கான சம்பளம் தீர்மானிக்கப்படுகின்றது' என்றும் அவர் தெரிவித்தார்.

'அதற்காக இன்றும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சில தொழிற்சங்கங்கள் இந்த ஒப்பந்தத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். இந்தப் பின்னணியில், நவீன உலகத்தின் வளர்ச்சிக்கும் வேகத்துக்கும்  ஈடுகொடுக்க முடியாத தேயிலை தொழில்சார்ந்த உழைப்பாளர் சமூகம், வேறு தொழில்களை நாடிச் செல்கின்றனர்.

உழைப்புக்கான ஊதியமும் தொழில் கௌரவமும் இன்றைய மக்களின் தேவையாக உள்ளது. எனவே அவர்கள் வெளியேற தொடங்குகிறார்கள். அதேநேரம், மாற்றுத் தொழில் தெரியாதவர்கள், வெளியேற முடியாதவர்கள் தொடர்ந்தும் வறுமை கோட்டுக்கு கீழே தள்ளப்படுகிறார்கள்.  

தேயிலைத் தொழிலை பொறுப்பேற்ற கம்பனிகள் அந்த தேயிலை வளரும் மலைப்பகுதிகளில் தேயிலை தவிர்ந்த பிற உற்பத்திகளிலும் செயற்பாடுகளிலும் தமது வருமானத்தை ஈட்டத் தொடங்கிவிட்டன. குறிப்பாக மரங்களை வெட்டி விற்பனை செய்தல், பாரிய அச்சுறுத்தலாக உள்ளது. இது தேயிலைத் தொழில்துறைக்கு மாத்திரமல்ல பசுமை உலக கோட்பாட்டுக்கும் அச்சுறுத்தலாகும்' என்றும் அவர் தெரிவித்தார்.

'தேயிலைப் பயிர்களிடையே மிளகு, கராம்பு போன்ற திரவியங்களை இடைப் பயிர்ச்செய்கை செய்வதன் மூலம் வருமானம் பெறுகிறார்கள். அது தவறல்ல அதனை உற்பத்தி செய்யலாம். ஆனால் தேயிலையை கைவிட்டு திரவியப் பயிர்ச் செய்கைக்கு மாறுவது என்பது தேயிலைத் தொழிலின் முக்கியத்துவத்தை குறைப்பதும் அதில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை கைவிட்ட நிலைமையாகவும் அமைந்துவிட்டது. மாத்தளை மாவட்டத்தில் உள்ள தோட்டங்களில் இந்த நிலைமையை பரவலாக அவதானிக்கலாம்.

தோட்டக்கம்பனிகள் தமது செலவுக் கணக்கில் முகாமைத்துவ செலவினங்களை அதிகம் காட்டுகின்றன. அதேநேரம் செலவுக்குறைப்பு முறையாக அநேக தேயிலைத் தொழிற்சாலைகளை மூடிவிடுகின்றன. தேயிலையின் மீள்நடுகை குறைந்து வருகின்றது. இவை யாவும் தேயிலைத் தொழிலின் நிலைத்திருத்தலுக்கு அச்சுறுத்தலாகவுள்ளன.

தேயிலைத் தொழிலின் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை தங்கியிருப்பவர்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவதன் மூலமே தேயிலையின் தரத்தையும் உயர்த்தி தேயிலையை நிலைத்திருக்க செய்யமுடியும்' என உறுதியாக நம்புகின்றேன்' என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .