2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

“பணியாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்”

Kogilavani   / 2017 ஒக்டோபர் 06 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

நோர்வூட் ஆடைத் தொழிற்சாலையின் பணிகள் தொடர்ந்து முறையாக இடம்பெறுவதற்கும் அங்குப் பணிப்புரிபவர்களின் பாதுகாப்புக்குறித்தும் பொறுப்பு வாய்ந்த தரப்பினர், அதிக அக்கறை செலுத்த வேண்டும்” என, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

“நோர்வூட் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகின்ற ஊழியர்களில் சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள், 4ஆம் திகதி, திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச்சம்பவத்தால் பிரதேசத்தில் பதற்றமானதொரு நிலைமையும் ஏற்பட்டது.

நோர்வூட் பிரதேசத்தில் முறையாக இயங்கி வருகின்ற இந்த ஆடைத்தொழிற்சாலையின் மூலமாக பலருக்கு தொழில் வாய்ப்புக்கிடைக்கக் கூடிய நிலைமை ஏற்பட்டமை அனைவரும் அறிந்த விடயமாகும்.

800 ஊழியர்கள் பணிபுரிகின்ற இந்த ஆடைத் தொழிற்சாலையில், ஊழியர்கள் பல மணி நேரம் பணிபுரிய கூடிய வசதி வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்குப் பொறுப்பு வாய்ந்த தரப்புகள் ஏற்கெனவே உரிய கவனம் செலுத்தவில்லை என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சுற்றாடல் அதிகார சபை, கைத்தொழில் அமைச்சு, சிறு வர்த்தக அமைச்சு, தொழில் திணைக்களம், பிரதேச சுகாதார பிரிவு  போன்ற அரசசார்பான நிறுவனங்கள், இந்த ஆடைத்தொழிற்சாலையின் தரம் குறித்து முறையாக ஆராய்ந்ததாக தெரியவில்லை.

800 பேர் பணிபுரிகின்ற இந்தத் தொழிற்சாலையில், 3,000 சதுர அடி சாளரங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஆனால், தற்போது 200 சதுரஅடி சாளரங்களே பொருத்தப்பட்டுள்ளன எனவும் இதன் காரணமாக வெப்ப வெளியேற்றல் குறைவடைந்து பணியாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதெனவும் சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இயந்திரங்கள் மூலம் வெளியேற்றப்படும் வெப்பம் மனித உடலில் இருந்து வெளியேற்றப்படும் வெப்பம், வெப்பமான கால நிலை போன்றனவற்றினாலேயே பணியாளர்களுக்கு மூச்சுத்திணறல்  ஏற்பட்டிருக்கலாமெனவும் சுகாதார தரப்பினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன், தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலையை முறையாக செயற்படுத்துவதற்கும், தொழிற்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .