Kogilavani / 2017 ஜூலை 02 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்
நல்லாட்சி அரசாங்கத்தினால், நாடு அதாள, பாதாளத்துக்குச் சென்றுகொண்டிருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். மலையகத்துக்கு உரித்தான அரச காணிகளை, அரசாங்கம் விற்பனை செய்ய முயல்வதாகவும் அவர் கூறினார்.
'சல்லாபிக்கும் அரசும் துஷ்பிரயோகிக்கப்படும் இலங்கை மாதாவும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கு, கண்டி தபாலகக் கேட்போர் கூடத்தில், சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் விசேட பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர்,
'கடந்த ஆட்சியில், 30 வருட கொடூர யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. நாடு மிக துரிதமாக அபிவிருத்தியடைந்தது. ஆனால், 2015ஆம் ஆண்டுடன், நாம் கண்ட அனைத்து வளர்ச்சியும் பின்தள்ளப்பட்டன. தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, சுகாதாரத்துறை, கல்வித்துறை எனஅனைத்து துறைகளும் சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கின.
நூற்றாண்டு பழைமைவாய்ந்த கண்டி தபால் நிலையம், நுவரெலியா தபால் நிலையம், வரலாற்றைப் பறைசாற்றும் போகம்பறைச் சிறைச்சாலை, கண்டியிலுள்ள இராணுவ தலைமையகம் போன்ற பல்வேறு சொத்துகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
சொத்துகளை விற்று, வயிறு வளர்க்கும் கலாசாரத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. இதேவேளை, காணிகளைப் பிரித்து, பொதுமக்களுக்கு காணி உறுதி வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை எந்த அரசும் காணிக்கு, சின்னக்கரை உறுதி வழங்கியதில்லை. சுவர்ணபூமி, உதாகம அல்லது பொற்காணி, தங்கக்காணி என்று ஏதாவது ஒரு பெயர்கொண்டு அவை அழைக்கப்படலாம். அவற்றை விற்க முடியாது. ஆனால், சின்னக்கரை காணி உறுதி வழங்கி, காலப் போக்கில் அவற்றை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு வழங்கும் சதித்திட்டத்தை நல்லாட்டசி அரசாங்கம் தீட்டி வருவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
மத்திய மலைநாட்டிலுள்ள நக்கில்ஸ் தொடர் முதல் அம்பன் கங்கைவரையான பகுதியும் மற்றம் நாவலப்பிட்டிய பிரதேச காணிகளும் இவ்வாறு விற்கப்பட உள்ளன. அவ்வாறு நடந்தால், எமது நீரூற்றுக்களுக்கு பாரிய ஆபத்து ஏற்படலாம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .