2025 ஜூன் 23, திங்கட்கிழமை

'வீடுகளை வழங்குவதிலும் அநீதி இழைக்கப்படுவது அடிப்படை உரிமைகளை மீறும் செயல்'

Kogilavani   / 2012 டிசெம்பர் 09 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இந்திய அரசாங்கத்தால் அமைத்துக் கொடுக்கப்படும் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும்போது தமிழ் பேசும் மக்கள் ஓரங்கட்டப்பட்டு அநீதி இழைக்கப்படுவதானது அம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்' என  ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண்.குகவரதன் தெரிவித்துள்ளார்.

'இன ரீதியான அரசியல் பலமுள்ளவர்களின் தலையீடுகளால் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே உள்ள இன நல்லுறவு பாதிக்கும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட வீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இதன்போது வீடுகளை ஒதுக்குவதில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திலுள்ள பலமுள்ள அமைச்சர்கள் சிலரின் தலையீடுகளாலேயே இந்த நிலமை உருவாகியுள்ளது.

ஆனால் உயிர் இழப்புக்கள், சொத்து இழப்புக்கள் உட்பட யுத்தத்தின் கோரப் பிடியில் சிக்கிச் சின்னா பின்னமாகிய தமிழ் மக்களுக்கு நியாயமான ரீதியில் வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.  'புட்டுக்குள் மாவும், தேங்காய்ப் பூவும்'  போன்றது தமிழ் முஸ்லிம் மக்களின் உறவு என முன்னைய முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்தனர். அத்துடன் அந்த அளவிற்கு இருசாராரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைந்தனர்.

மன்னாரில் மட்டுமல்ல முல்லைத்தீவு, கிளிநொச்சியிலும் பயனாளிகளுக்கு வீடுகளை வழங்குவதில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. தமிழ் மக்களுக்கு அரசாங்கம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதில்லை, அதேவேளை இந்தியாவால் அமைத்துக் கொடுக்கும் வீடுகளை வழங்குவதுமில்லை.

எனவே இது தொடர்பில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தி தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இது இந்திய வரலாற்றில் ஒரு கரும் புள்ளியாக பதியப்படும். எனவே இந்த வரலாற்று பிழை விடுவதை இந்தியா தவிர்த்துக் கொள்ள வேண்டும்'.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .