2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கேட்பதை கொடுக்காது கேட்காததை வழங்கும் புதுமையான அரசு: மனோ

Kanagaraj   / 2013 ஜனவரி 02 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேட்பதை கொடுக்காமல், கேட்காததை கொடுக்கும் இந்த அரசு ஒரு புதுமையான அரசாங்கம். என்பதனை சிங்கள மக்கள்       புரிந்துக்கொள்ளவேண்டும். தம்மை திருத்திக்கொள்வதற்கு இந்த அரசாங்கத்துக்கு இந்த வருடம் தான் கடைசி சந்தர்ப்பம் ஆகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பிரித்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்' என்ற தொனிப்பொருளில் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களை கைது செய்து அவர்களை புனர்வாழ்வு முகாம்களில் அடைக்கிறார்கள். இது பற்றி கேட்டால், இந்த மாணவர்கள்தான் தாமாகவே புனர்வாழ்வை விரும்பி கேட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

இப்படி சொல்லும் அரசு, தமிழ் மக்கள் தொடர்ந்து கோரி வருகின்ற அரசியல் தீர்வை தர மறுக்கிறது. ஒரே நாட்டுக்குள் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டு வாழ்வோம் என நாம் கேட்பதை தர மறுக்கிறது. இன்றைய அரசியல் சட்டத்தில் இருக்கின்ற 13 ஆவது திருத்ததையும், மாகாணசபையையும் கூட வடக்குக்கு தர மறுக்கிறது. தமிழ் மொழியில் தங்கள் கருமங்களை ஆற்றிகொள்ளும் உரிமையை தமிழர்களுக்கு தர மறுக்கிறது.

நமது இந்த மேடை தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாக பேசவுவதற்காக நாம் உருவாக்கியுள்ள மேடை ஆகும். நாட்டின்  ஏனைய பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு இந்நாட்டில் எத்தனையோ கட்சிகளின் மேடைகள் உள்ளன. பலதும் இங்கே பேசினாலும், அரசியல் அதிகாரத்தை பிரிப்போம், நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற செய்தியை சிங்கள மக்களுக்கு சொல்வதற்கே  நாம் இந்த மேடையை பிரதானமாக பயன்படுத்துகின்றோம்.

மூளைகளை பூட்டி வைக்க வேண்டும்

தென்னிலங்கையில் இன்று பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்கப்படுகின்றது. இந்த அரசாங்கத்தின் மகிந்த சிந்தனையை அனுசரிக்கவேண்டும். வேறு அரசியல் சிந்தனைகளை கருத்தில் கொள்ள கூடாது. பல்கலைக்கழக மாணவர்கள் தமது மூளைகளை பூட்டி வைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த தலைமைத்துவ பயிற்சி நடத்தப்படுகிறது.

வடக்கில் புனர்வாழ்வு என்பது பெரும்பான்மை இன ஆதிக்கத்தை தமிழ் இளைஞர்கள் எதிர்ப்பில்லாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது. தமிழர்கள், இந்த நாட்டிலே அதிகாரத்தை கோரக்கூடாது. இந்த நாடு சிங்கள இனத்துக்கு மாத்திரம் சொந்தமான நாடு என்ற சிந்தனையை தமிழ் இளைஞர்கள் தலையில் புகுத்துவதற்காக இந்த புனர்வாழ்வு பயிற்சி நடத்தப்படுகிறது.

அப்பாவி  அரசாங்கம்

யாழ் மாணவர்கள் தாமாக விரும்பி புனர்வாழ்வை கேட்டார்கள் என இவர்கள் சொல்கிறார்கள். ஆகவே அவர்கள் கேட்டதை இவர்கள் கொடுத்தார்களாம். ஆகா, கேட்டதை எல்லாம் கொடுக்கும் எவ்வளவு நல்லதொரு அப்பாவி  அரசாங்கத்தை ஆண்டவன் நமக்கு தந்துள்ளான் என்பதை பாருங்கள்.

ஆனால், கேட்பதை எல்லாம் கொடுக்கும் அரசாங்கத்துக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுள்ள  ஜனநாயக பிரதிநிதிகளான நாம் கேட்பது காதில் விழவில்லை. நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாகாணசபையை முதலில் வழங்குங்கள் என்றும், நாட்டின் அரசியல் சட்டத்தில் இன்று உள்ள 13 ஆம் திருத்தத்தை முழுமையாக  அமுல் செய்யுங்கள் என்றும் நாம் கேட்பது இவர்கள் காதில் விழவில்லை.     

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடிந்தவுடன் இன்று பொருளாதார யுத்தம் நடத்தப்படுவதாக அரசு சொல்கிறது. வடக்கில் இதன்மூலம் பொருளாதார அபிவிருத்தி நடைபெறுவதாக சொல்கிறது. யுத்தத்தால், உடைந்து நாசமாகியுள்ள பாதைகளையும், கட்டிடங்கள் சிலவற்றையும் நிர்மாணிப்பது எப்படி பொருளாதார அபிவிருத்தியாகும்?  உடைந்தவைகளை செய்வது அபிவிருத்தி அல்ல. அது திருத்த வேலையாகும். இதுவும் இன்று ஒழுங்காக நடைபெறவில்லை.

கொழும்பு முடிவு வடக்கிற்கு சரிவராது

உண்மையில் தமிழ் மக்கள் கோருவது கொழும்பிலிருந்து எடுக்கப்படும் முடிவுகளை அல்ல. இங்கேயிருந்து முடிவெடுத்து சென்று வடக்கில் அமுல் செய்ய நினைக்காதீர்கள். திருத்த வேலைகளைகூட இதன்மூலம் ஒழுங்காக செய்ய முடியாது. பாலம் கட்டவும், வீதி அமைக்கவும், அவற்றை எங்கே, எப்படி, எவ்வாறு என்ற முடிவுகளை எடுக்கும் அரசியல் அதிகாரத்தை தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படையுங்கள். இதுதான் உண்மையான அரசியல் அதிகார பகிர்வு.  இதன்மூலம்தான் உண்மையான பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் என்றார்.
     

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .