2026 மார்ச் 18, புதன்கிழமை

நல்லாட்சி அரசாங்கத்தில் இஸ்ரேலுடன் உறவில்லை

Princiya Dixci   / 2015 நவம்பர் 09 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கத்துக்கு இஸ்ரேலுடன் நட்புறவை பேணும் எண்ணங்களோ அல்லது அவர்களுடன் இராஜதந்திர உறவுகளைப் பேணும் நிலைபாடோ கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

இலங்கை, இஸ்ரேலுடனும் யூத சியோனிஸ்ட்களுடனும் நட்புறவை வளர்த்து வருவதாக சுமத்துப்பட்டுவரும் குற்றசாட்டுகள் தொடர்பில் வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி. சில்வா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன ஆகியோரை அலரி மாளிகையில் வைத்து முஜிபுர் ரஹ்மான் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதேவேளை, அரசியல் அநாதைகளாக்கப்பட்டவர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பின்னாலிருந்து செயற்படக்கூடிய சிலரே இவ்வாறான தவறான தகவல்களை வெளியிடுகின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

அண்மையில் அமெரிக்க யூத சங்கத்தினர் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். அது இராஜதந்திர விஜயமல்ல. எனினும், அவர்கள் இந்நாட்டுக்கு வந்தபோது இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், ஜப்பானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி.சில்வாவை அவர்கள் சந்தித்தனர். 

இது சாதாரண சந்திப்பாகும். யூத அமைப்புகளுடனோ அல்லது இஸ்ரேலுடனோ இல்லாவிடின் சியோனிஸ்ட்களுடனோ எவ்வதமான உடன்படிக்கைகளையும் நாம் கைச்சாத்திடவில்லை என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் என்னிடம் தெரிவித்தார். 

இலங்கை - இஸ்ரேல் நட்புறவு சங்கமொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறித்து அமெரிக்க யூத அமைப்பின் இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டிருக்கின்றமை தொடர்பாக பிரதி வெளிவிவகார அமைச்சரிடம் நான் கேள்வி எழுப்பினேன். அது மட்டுமன்றி இதனால் இலங்கை முஸ்லிம்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் அவரிடம் தெரிவித்தேன். எனினும், குறித்த நட்புரவு சங்கம் அமைக்கப்பட்டிருந்த செய்தியை ஹர்ச டி.சில்வா முற்றாக மறுத்தார் . 

இதேவேளை, சீனாவுக்கான பயணத்தை நிறைவு செய்தபின் நாடு திரும்பிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவும் குறித்த நட்புறவுச் சங்கம் தொடர்பான செய்தியை மறுத்தார். 

அத்துடன், நாட்டுக்கு வந்த அவர்கள் எம்மைச் சந்தித்து புதிய அரசியல் மாற்றத்துக்கு பின்னரான நாட்டு நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடினர். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமே இஸ்ரேலுடனான உறவைப் புதிப்பித்தது. அத்துடன், அவர் மற்றும் அவருடனான குழுவொன்று இஸ்ரேலுக்குச் சென்று அந்நாட்டுடனான இராஜதந்திர நடவடிக்கைகளை புதுப்பித்தது.

இதற்கப்பால் இலங்கையில் இஸ்ரேலுக்கான தூதரகமொன்றை நிறுவும் முயற்சியையும் மஹிந்த அரசாங்கமே முன்னெடுத்தது. இதன்போது எதிர்க்கட்சியில் ஒரு மாகாண சபை உறுப்பினராக இருந்துகொண்டு அதனை நான் எதிர்த்து வந்தேன். 

இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தில் அவ்வாறானதொரு திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என மஹிந்த ராஜபக்ஷவும் அவருக்கு பின்னால் ஒழிந்துகொண்டிருப்பவர்களும் சில பொய் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். 
 
எக்காரணத்தைக் கொண்டும் நல்லாட்சி அரசாங்கம், இஸ்ரேலுடனான எவ்விதமான இராஜதந்திர தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளாது. அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X