2025 ஜூன் 21, சனிக்கிழமை

மாதகல் விவகார மனு நவ.12இல் விசாரணை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 17 , பி.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இடம்பெயர் மாதகல் மேற்கு கிராமவாசிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நெற்று முடிவு செய்தது.

இந்த மனு நேற்று நீதியரசர்கள் ஷிராணி திலகவர்த்தன மற்றும் பிரியசாத் டெப் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

ஆயுத மோதல்கள் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும், தாம் தமது உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

யாழ். மாவட்டத்திலுள்ள மாதகல் மேற்கு கிராமவாசிகள் சட்டத்தரணி மோஹன் பாலேந்திரா ஊடாக தாக்கல் செய்துள்ள தமது மனுவில் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியா, யாழ். பாதுகாப்புப்படைக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மனதாரர்கள் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், ஜுவன்ரா அருளானந்தம் மற்றும் மோகன் பாலேந்திரா ஆஜரானார்கள். 

யுத்தம் 2009ஆம் ஆண்டு முடிவடைந்த போதிலும் தாம் தமது சொந்த வீடுகளில் மீள்குடியேறுவதும் அங்கு செல்வதும் தொடர்ந்தும் தடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தமது மனுவில் முறையிட்டுள்ளனர்.

தம்மை அனுமதிப்பதற்குப்பதிலாக, யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள தமது கிராமத்தை உள்ளடக்கிய வலி;காமம் பிரதேசத்தைச் சூழ தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் மனுவில் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.    

வலிகாமம் பிரதேசவாசிகளின் மீள்குடியேறும் உரிமையை உயர்நீதிமன்றம் நடுத்தீர்ப்பு வழங்கியிருந்த போதிலும், தாம் தமது சொந்த காணிகளுக்குச் செல்லவோ அல்லது மீள்குடியேறவோ இன்னமும் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் முறையிட்டிருக்கின்றனர்.

தமது காணிகள் அமைந்திருக்கும் பிரதேசம் ஒரு பாதுகாப்புப் பிரதேசம் என்று பிரகடனப்படுத்தும் எந்தவொரு வலுவான சட்டமோ அல்லது ஒழுங்குப் பிரமாணமோ கிடையாது என்பதனை அவர்கள் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

அவசரகாலச்சட்ட நிலைமை ஆகஸ்ட் 2011இல் தளர்த்தப்பட்டது. எனவே இலங்கையிலிருக்கும் எந்தவொரு பிரதேசத்தையும் உயர் பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்த எந்தவொரு சட்டரீதியான முகாந்திரமும் கிடையாது என அவர்கள் வலியுருத்துகின்றனர்.

அரசியலமைப்பில் உறுதிசெய்யப்பட்டிருக்கும் தமது அடிப்படை உரிமைகளான சமத்துவ உரிமை, சட்டபூர்வமான தொழிலில் ஈடுபடும் உரிமை, விரும்பிய இடம்செல்லும் உரிமை மற்றும் இலங்கைக்குள் தமது இருப்பிடத்தை தெரிவுசெய்வதற்கான உரிமை ஆகியன மீறப்பட்டுவிட்டன என்று பிரகடனப்படுத்தும் தீர்ப்பை வழங்குமாறு அவர்கள் தமது மனுவில் கோரியிருக்கிறார்கள்.   

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .