2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஓகஸ்ட் 6 முதல் நாடளாவிய ரீதியில் பல்கலை ஆசிரியர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 ஜூலை 25 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி, ஜே. டானியல்)

ஓகஸ்ட் 6ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சமமேளனத்தினால் இன்று காலை 10.00 மணியளவில் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது. அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"வடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு உயர் கல்வி அமைச்சினால் வழங்கும் இலவச கல்வி சலுகைகள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. யாழ். மாவட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு 20 சதவீத சலுகைகள் கிடைக்கப்பட்டு வருகின்ற சந்தர்ப்பத்தில் 80 சதவீத சலுகைகளும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் இலவச கல்வி அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இலவச கல்வியில் ஏழை குடும்பங்களின் பிள்ளைகள் கல்வி கற்று வந்தார்கள். இவ்வாறான நிலை ஏற்பட்டால் பணம் படைத்தவர்களை தவிர ஏழைகள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படும். இந்த போராட்டம் அகில இலங்கை பல்கலைக் கழகம் இணைந்து கல்விசாரா ஊழியர்களின் பங்களிப்புடன் போராட்டம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு கல்வி சாரா ஊழியர்கள் மட்டுமன்றி அரச வேலை செய்யும் நபர்களுக்கும் போதாமையாக உள்ளது. சம்பள உயர்வினை படிப்படியாக உயர்த்த வேண்டும். இந்த நிலமை இன்று வரை தொடர்ந்து கொண்டுவரும் நிலையில் இலங்கையில் கல்வி சாரா ஊழியர்கள் தமது சேவைகளை செய்ய வேண்டும்.

சம்பள உயர்வு தொடர்பான தொழிற்சங்க நடவடிக்கைகள் 98 வீதமான அளவு நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தொடர்ந்து வெற்றி கொள்ளும் வரை போராட்டம் நடாத்தப்படும். முன்னைய காலங்களில் 12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற அடிப்படையில் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. தற்போது 19-20 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற அடிப்படையில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் இலவச கல்வி அழிந்து வரும் காலகட்டத்தில், இனிவரும் காலங்களில் இலவச கல்வி அழிந்து போககூடாது. தற்போது கல்விச் சமூகத்தில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுகின்றன. கல்விச் சமூகத்தில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுவது கல்வியை பாதிப்படைய செய்து விடும்.

பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக இயங்கினால் தான் நவீன கண்டுபிடிப்புக்கள் மூலம் எதிர்கால சந்ததியினர் எதிர்காலத்தில் முன்னேற முடியும்.

நாட்டில் கல்வி ஒன்றுதான் இலவசமாக கிடைகின்றது. அதையும் தடுத்து நிறுத்துவதற்காக தனியார் பல்கலைக்கழகங்களை நாட்டில் நிறுவி அதனை வியாபாரமாக்க பார்க்கின்றது இந்த அரசாங்கம்.

இலவச கல்வி நாட்டில் எப்போது தொடங்கப்பட்டதோ அதில் இருந்துதான் ஏழை மக்கள் தங்கள் அறிவினை வளப்படுத்த முடிந்தது. பல்கலைக்கழகங்களை தனியார் மயப்படுத்தி அரசாங்கம் இலாபமடைய பார்க்கின்றது.

உண்மையில் ஏழைகளுக்கு கல்வியை எட்டாமல் செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கான ஒன்றிணைந்த செயற்பாடுகள் தேவை.

இலங்கையில் இலவச கல்வி அழிந்து போனால் இந்தியா போன்று வசதி படைத்தவர்கள் மட்டும் கல்வி கற்க முடியும் ஏழைகள் கூலி வேலை செய்யவும், பல லட்சம் ரூபா பணம் செலுத்தி கல்வியை தொடரும் அபாய நிலையும் ஏற்படும்.

இந்த நடைமுறை நிறுத்தப்பட்டு இலவச கல்வி முறைமை விரிவாக்கப்பட வேண்டும். இலங்கையில் இலவச கல்வி நிலைகொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் பெற்றோர்களுக்கு இலவச கல்வி முறைமை பற்றி விழிப்புணர்வு மேற்கொள்ளவுள்ளதுடன் பொது மக்களிடம் கையெழுத்து நடவடிக்கை மேற்கொண்டு இலவச கல்வி முறைமையினை நடைமுறைப்படுத்தும் திட்டத்தினை விரிவுபடுத்தக் கோரி உயர் கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைக்கவுள்ளது. இந்நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த தவறும் பட்சத்தில் நாடாளாவிய ரீதியில் போராட்டம் நடாத்த திட்டமிட்டுள்ளது" என்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .