2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 78 பேர் கைது

Kogilavani   / 2012 நவம்பர் 02 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                   (எஸ்.கே.பிரசாத், சுமித்தி)
யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த ஒருவார காலத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இத் தகவல்களை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'கடந்த ஒருவாரத்தில் கைது செய்யப்பட்ட 78 பேரில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 19 பேரும் அனுமதியற்ற மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்கள் 12 பேரும் குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 12 பேரும் சூழல் மாசடைவை ஏற்படுத்திய 15 பேரும் பொது இடங்களில் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த 6 பேரும் உள்ளடங்குகின்றனர்.

கடந்த ஒரு வாரகாலத்தில் யாழ்.நகர் பகுதியில் இடம்பெற்ற 8,57,493 ரூபாய் காசோலை மோசடி குறித்து 5 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு காசோலை மோசடியில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஒருவாரத்தில் பஸ்களில் அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்ற 38 சாரதிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நபர் ஒருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய இரு சந்தேக நபர்கள் மன்னாரில் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவானவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு 24 மணி நேர விசேட ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் யாழ்.குடா நாட்டில் பகல்வேளைகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் அதிகம் பதிவாகியுள்ளன.

இதனால் திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக 24 மணி நேர ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இந்த ரோந்து நடவடிக்கை அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக கொள்கைச் சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும்"  என்று அவர்  மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .