2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'இனச் சுத்திகரிப்பு என்பது எங்கிருந்து வந்தது?’

George   / 2016 நவம்பர் 01 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

யுத்தம் முடிவடைந்த நிலையில், முஸ்லிம் மக்கள், மீள்குடியேறிக்கொண்டிருக்கிறார்கள். அந்த மக்கள், முழுமையாக மீள்குடியேறிக் கொண்டிருக்கின்ற நிலையில், இனச் சுத்திகரிப்பு என்பது எங்கிருந்து வந்தது? என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், கேள்வி எழுப்பினார்.

முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில், வடக்கு மாகாணசபை அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கிறது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வெளியிட்ட கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, சுரேஷ் பிரேமசந்திரன், வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில், வடக்கு மாகாணசபை அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கிறது என, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், தெரிவித்துள்ளார். அது மாத்திரமல்லாமல், விடுதலைப் புலிகள், முஸ்லிம் மக்களை வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றியதானது, ஓர் இன சுத்திகரிப்பு என்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், ஒரு விடயத்தை சுமந்திரன் புரிந்துகொள்ள வேண்டும். புனர்வாழ்வு என்ற விடயம், மத்திய அரசாங்கத்துக்கு ஒதுக்கப்பட்ட விடயமாக இருக்கின்றதே தவிர, மாகாண அரசுக்கு சொந்தமான ஒரு அதிகாரப் பகிர்வாக இதுவரையில் இல்லை.

வடக்கும், கிழக்கும் தான், யுத்தத்தினால் பாரிய அளவில் பாதிக்கப்பட்ட போதிலும்கூட, அது தொடர்பான புனருத்தாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, மாகாணங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை, கற்றறிந்த சட்டத்தரணியான சுமந்திரனுக்கு விளங்கும் என கருதுகின்றோம்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில், ரிஷாட் பதியுதீனும் இப்பொழுதைய மைத்திரி - ரணில் ஆட்சியில் சுவாமிநாதனும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்துக்குப் பொறுப்புக் கூறவேண்டிய அமைச்சர்களாக உள்ளனர். அதேசமயம், புனர்வாழ்வு அமைச்சு என்பது, வடக்கு - கிழக்கு மாகாணசபைகளில் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

காணிகளை மீளப் பெற்றுக்கொள்ளல், புதிய காணிகளை பகிர்ந்து வழங்குதல், அவர்களுக்கான வீடுகளைக் கட்டுவித்தல், வாழ்வாதாரங்களைக் கொடுத்தல் போன்ற சகல விடயங்களுமே, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளன. இவ்வாறான ஒரு சூழ்நிலையில், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக, வடக்கு மாகாணசபை ஒரு அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கிறது என்பது, முதலமைச்சரின் மேல் சுமந்தரனுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறதே தவிர, உண்மை நிலவரங்களை அல்ல.

தமிழ் மக்களும்கூட, இன்னமும் மீளக்குடியேற முடியாத நிலையும் கடந்த இருபத்தைந்து வருடங்களாக அவர்கள் முகாம்களில் வாழக்கூடிய நிலையும், வடக்கில் தொடர்ந்தும் நிலவிவருகிறது. இவர்களின் மீள்குடியேற்றத்துக்காக, தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பல்வேறு கட்சிகளும் தொடர்ந்தும் போராடவேண்டியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், மாகாண சபையானது, மீள்குடியேற்றத்துக்கோ புனர்வாழ்வுக்கோ எதிராக இருக்கின்றது என்று, பொறுப்பு வாய்ந்த பதவிகளில் உள்ள சுமந்திரன் போன்றோர் கூறுவது ஒரு பொறுப்பற்ற கருத்தாகும்.

இதனைப் போன்றே, வடமாகாணத்தில் விடுதலைப் புலிகள், முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது, ஓர் இனச்சுத்திகரிப்பு என்பதையும் அவர், மீண்டும் மீண்டும் கூறிவருகின்றார். முஸ்லிம் மக்கள் அவ்வாறு வெளியேற்றப்பட்டமையை தவறு என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தொடர்ந்தும் கூறிவந்திருக்கின்றது. அவர்களின் வெளியேற்றத்தை எந்தவொரு தமிழ்க்கட்சியும் நியாயப்படுத்தவும் இல்லை.

அதேசமயம், யுத்த நிறுத்த காலகட்டத்தில், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஹக்கீமுக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை பிரபாகரன் ஏற்றிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
யுத்தம் நடந்த காலகட்டத்தில், மாவட்டத்தில் இருந்து சகல மக்களும் வெளியேற்றப்பட்டார்கள்.

யாழ்ப்பாணமே வெறிச்சோடிப்போயிருந்தது. யுத்த கால கட்டத்தில் இத்தகைய தவறுகள் நடந்துதான் இருக்கின்றன. ஆனால், யுத்தகாலத்தில் பல்லாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்படும்போது வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், பாதுகாப்பாக இருந்தார்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இப்பொழுது யுத்தம் முடிந்து, முஸ்லிம் மக்கள் மீள்குடியேறிக்கொண்டிருக்கிறார்கள். மன்னாரில் வவுனியாவில், முல்லைத்தீவில், கிளிநொச்சியில் மற்றும் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. ‘இவர்களை மீள்குடியேற்றியது, நான் தான்’ என்றும் ரிஷாட் பதியுதீன், மார்தட்டிக்கொள்கின்றார். மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த ரிஷாட்டுக்கு, அதனைச் செய்ய வேண்டியது அவருடைய கடமை.

அந்த மக்கள் முழுமையாக மீள்குடியேறிக் கொண்டிருக்கின்ற நிலையில், இனச் சுத்திகரிப்பு என்பது எங்கிருந்து வந்தது? ஓர் இனம் அழித்தொழிக்கப்பட்டிருந்தால் அல்லது தனது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாதிருந்தால், அதை ஒரு இனச் சுத்திகரிப்பாக எடுத்துக்கொள்ள முடியும்.

இலங்கையில் நடைபெற்ற பல்வேறு கலவரங்களின் போதும், தென் பகுதியில் இருந்த தமிழ் மக்கள், வடக்கு-கிழக்குக்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்கள். அதனை ஒரு இனச் சுத்திகரிப்பு என்ற வரையறையின்கீழ் கொண்டுவரமுடியுமா? ஆகவே, தவறானக் கருத்துக்களைக்கூறி, தமிழ் -முஸ்லிம் மக்கள் மத்தியில் மேலும், மேலும் முரண்பாடுகளை உருவாக்க வேண்டாம் என சம்பந்தப்பட்ட அனைவரையும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கேட்டுக்கொள்கின்றது” என, அவ்வறிக்கையில் உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X