2025 ஜூலை 23, புதன்கிழமை

'இராணுவ அதிகாரி எனது மகனை கூட்டிக்கொண்டு திரிந்தார்'

Niroshini   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட தனது மகனை கஜபாகு இராணுவ பிரிவைச் சேர்ந்த சுரேஸ் என்ற இராணுவ அதிகாரி தலைமையிலான குழுவினர் சுற்றிவளைப்புக்களின் போது, முகத்தை துணியால் கட்டிய நிலையில் கொண்டு திரிந்ததாக காணாமற்போன ஐயம்பிள்ளை நிரூபன் (காணாமற்போகும் போது வயது 20) என்பவரின் தாயார் சாட்சியமளித்தார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (16) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

இணுவிலுள்ள பகுதியில் எனது மகன் சைக்கிள் கடை வைத்திருந்தார். 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் மகனின் கடைக்குச் சென்ற இராணுவத்தினர், மகனை அடித்து உதைத்து பிடித்துச் சென்றதுடன், கடைக்கு பக்கத்து வீட்டிலுள்ள 2 இளைஞர்களையும் பிடித்து மூன்று பேரின் சேட்டுக்களை கழற்றி அவர்களின் கையைக் கட்டிக் கொண்டு சென்றனர்.

மகனை 10 மணிக்கு பிடித்துச் சென்றனர். 4 மணிக்கு விட்டுவிடுவோம் என எமக்கு உறுதியளித்தனர். ஆனால், விடவில்லை. தொடர்ந்து 11 நாட்களின் பின்னர்,கடைக்குப் பக்கத்து வீட்டு இளைஞர்கள் இருவரையும் விடுவித்தனர். ஆனால் எனது மகனை விடவில்லை.

கொஞ்சக் காலமாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சுற்றிவளைப்பின் போது, மகனை முகத்தில் துணியால் கட்டிய நிலையில் கொண்டு திரிந்தனர் என கண்டவர்கள் என்னிடம் கூறினர் என அந்த தாயார் சாட்சியமளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .