2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

‘பேய்க்காட்டுற எண்டு நீங்கள் நினைச்சால் பேய்க்காட்டுவம்’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பேய்க்காட்டுற எண்டு நீங்கள் நினைச்சால் பேய்க்காட்டுவம் (ஏமாற்றுவது என்று நினைத்தால் நீங்கள் நினைத்தால் ஏமாற்றுவோம்)” என்று, பொலிஸார் ஒருவர், மிகவும் கடுந்தொனியில் தங்களிடம் தெரிவித்ததாக, சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட, யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவனான நடராசா கஜனின் தாயாரான நடராசா சறோஜினி (வயது 61) தெரிவித்துள்ளார்.  

சம்பவத்துக்குப் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி, அந்தத் தாய் விவரிக்கையில், 

“யாழ்ப்பாணம் வைத்தியசாலையிலிருந்து, என்னையும் மகளையும் சுலக்சனின் தந்தையையும் ஒவ்வொரு பொலிஸார், கைகளைப் பிடித்து அழைத்துச் சென்று வாகனம் ஒன்றினுள் ஏற்றி, யாழ். பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.  

அங்கு, எங்களுக்குத் தேநீர் தந்தனர். ஆனால், நாங்கள் மறுத்துவிட்டோம். பின்னர் அங்கு கம்பஸ் பெடியளும் வந்து விட்டனர். இதனை நாங்கள் திட்டமிட்டுச் செய்யவில்லை தவறுதலாக நடந்துவிட்டது. பொலிஸார், வெறியில் இருந்தார்களோ என்னவோ தெரியவில்லை சுட்டதுதான் மாணவர்கள் மீது பட்டுவிட்டது. மன்னித்துக்கொள்ளுங்கள் இனிமேல் இப்படியொன்றும் நடக்காது” என்று அங்கு வைத்து பொலிஸார், தங்களிடம் தெரிவித்ததாக அந்தத்தாய் தெரிவித்தார்.  

“சம்மந்தப்பட்ட பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க கொழும்பிலிருந்து ஆட்கள் வருகின்றார்கள், சம்பந்தப்பட்ட பொலிஸாரையும் நாங்கள் கைது செய்திருக்கின்றோம் கோட்சுக்கு (நீதிமன்றத்துக்கு) கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம் தெரியாமல் நடந்த இந்த சம்பவத்தை நீங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள். 

பொலிஸார், பந்தல் போடுவதற்கு உதவுவார்கள், கதிரைகள் பிஸ்கட், சோடாவும் தந்து எல்லா செலவையும் செய்யவார்கள் என்று சொல்லிப் போட்டு அங்கிருந்து (யாழ்ப்பாணம்) இங்குள்ள (கிளிநொச்சி) டி.ஜ.ஜி ஒபீசுக்கு கோல் பண்ணி எங்கட வீட்டு முகவரியையும் சொல்லி, போய் எல்லா உதவியையும் செய்ய சென்னார்கள்” என்றும் அந்தத் தாய் தெரிவித்தார். 

தாங்கள் செய்த குற்றத்துக்காக போஸ்மோட்டம், பெட்டிச் செலவு, வாகனச் செலவு எல்லாத்தையும் பொலிஸார் செய்து தாறம் என்றும், அந்த வீட்டுச் செலவு இந்தவீட்டுச்செலவு எல்லாத்தையும் நாங்கள் செய்யிறம் என்றும் சொன்னார்கள்.  

பின்னர், அங்குவந்த எனது மகன், ஏன் இங்கு வந்தீர்கள் இவங்கட கதைய கேக்காதேங்கோ எண்டு திட்டினான். அதன் பிறகு வைத்திய சாலையில் எங்களை இறக்குறதுக்கு ஒரு தமிழ் பொலிஸாரை வாகனத்துல ஏத்திக்கொண்டு வந்தவை. அவர், வரேக்க என்மகன் இவங்கள நம்பாதேங்கோ பேக்காட்டுறாங்க எண்டு கத்திக் குளறிட்டான். 

அந்த தமிழ் பொலிஸ் சொன்னார், நீங்கள் பேக்காட்டுற எண்டு நினைச்சால் பேக்காட்டுவம் இல்லன்டா உதவி செய்வம் எண்டவர் (ஏமாத்துற எண்டு நீங்கள் நினைச்சால் ஏமாத்துவம்) 

பிறகு நாங்கள் அங்க இறங்கி கிளிநொச்சிக்கு வந்துட்டம் என்றும் அந்தத் தாய் தெரிவித்தார்.  

பிறகு போன்ல கதைச்ச ஒராள் கொழும்பிலிருந்து காவல்துறை பெரியாள் ஒருவர் கதைக்கிறன் என்று சொல்லி, அவர் சொன்னார் உங்கட பிள்ளைகள் ஏஏல், ஓஏல் படிச்சிருக்கினமா நாங்கள் அவர்களுக்கு வேலைவாய்ப்பு தாறம். உங்களுக்கு நாங்கள் இந்த உதவியை மனிதாபிமான முறையில் செய்யிறம் மன்னிச்சிக்கொள்ளுங்கள் தவறுதலாக நடந்துவிட்டது என்றார்கள் என்றும் அத்தாய் தெரிவித்துள்ளார்.  

இதற்கிடையில் வீடுக்கு பொலிஸார் சிலர் சென்றிருக்கின்றார்கள். எங்கட ஆட்கள் அவர்களை செல்ல விடவில்லை. பொலிஸார் இங்க வரக் கூடாது உங்கட உதவியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டுடினம் என்றும் அந்தத் தாய் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X