2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து பௌத்த மேலாதிக்க சிந்தனை'

George   / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

'வடக்கு, கிழக்கில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தும் வகையிலான புத்தர் சிலைகளை நிறுவுதல் தொடர்பாக, வடக்கு முதலமைச்சரின் கருத்துக்கு எதிராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருக்கும் கருத்து, இன்றைக்கு பல தசாப்தங்களுக்கு முன்னர் இருந்தது போலவே பௌத்த மேலாதிக்க சிந்தனையின் மோசமான வெளிப்பாடு' என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வன்மையாக கண்டித்துள்ளார்.

'நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில், தமிழ்மக்கள் தங்கள் அபிலாஷைகள் தொடர்பில் இந்த அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என பரிசீலிப்பது தவிர்க்க முடியாது ஒன்று.

ஏனெனில் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் தமிழ்மக்களின் வாக்குகளும் முஸ்லிம் மக்களின் வாக்குகளும் பெருமளவான பங்களிப்பை செய்துள்ளன. எனவே தமிழ் மக்களின் தயவில் உருவான அரசாங்கத்தில் பிரதியமைச்சராக இருக்கின்ற ரஞ்சன் ராமநாயக்க, வெளியிட்டுள்ள வடக்கு முதலமைச்சர் முட்டாள்... என்ற தொனியிலான கருத்து, வடக்கு தமிழ்மக்களும் முட்டாள்கள் என்பதாகவே அமையும்.

எனவே, பொறுப்பற்ற விதத்தில் இனவாதியாக தன்னை அடையாளப்படுத்தி விடுத்துள்ள கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதுடன் இத்தகைய இனவாதிகளின் தவறான வழிநடத்தல்களால்தான் இன்று இந்த பாரிய அழிவுகளையும் உயிரழிவுகளையும் இந்த நாடு சந்தித்து, நீதி கோரி அலைய வேண்டிய நிலையில் மக்கள் இருக்கின்றனர்.

இந்த நாட்டின் சனத்தொகையில் பௌத்தர்கள் 70 சதவீதத்தினர் என்று ரஞ்சன் ராமநாயக்க, தெரிவிப்பதன் மூலமும் „இரணைமடு தமிழர்களுக்கு சொந்தமில்லை என கூறுவதன் மூலமும் தமிழர்கள் அடிமைகள் என சொல்லவருகிறாரா? நல்லாட்சி அரசாங்கத்தில் இருப்பவர்கள், தமிழர் மனங்களை வென்று தமிழர்களின் பிரச்சினைகளுக்கு சகிப்புத்தன்மையுடன் உழைக்கவேண்டுமே தவிர, இத்தகைய இனவாத கருத்துக்களை வெளியிட்டு மீண்டும் நாட்டை அழிவு நிலைக்குக் கொண்டுச் செல்லக்கூடாது.

தமிழர்களை தொடர்ந்து அவமதித்தும் அடிமைப்படுத்தியும் கொண்டிருக்கும் நிலை தொடர்ந்தால் அவர்களும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்' என செல்வம் எம்.பி மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X