2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கபடாவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது'

George   / 2016 நவம்பர் 07 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொஷரூபன்

'இலங்கை அரசின் மீது சுமத்தப்பட்டுள்ள போர்குற்ற விசாரணையில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் உள்ளடக்கப்படாவிட்டால், தமிழ் மக்களுக்கான நீதி என்பது கேள்விக்குறியாகவே இருக்கும்' என பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகார இராஜாங்க அமைச்சர் ஜொய்ஸ் அன்லெய்யிடம் தெரிவித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு இலங்கையை வந்தடைந்த பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொது நலவாய விவகாரங்களுக்கான அமைச்சரும், பாலியல் வன்முறைகள் தொடர்பான விசேட பிரதிநிதியுமான ஜொய்ஸ் அன்லெய் தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை (7) வடக்கு மாகாண முதலமைச்சரினையும் அவர் தலைமையிலான அமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாடிருந்தார். இச்சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 'ஜெனிவாவில் அடுத்த வருட மார்ச் மாதம் வரவேண்டிய செயலாளர் நாயகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் நடைபெறுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக இவர் இங்கு வந்துள்ளார். நாங்கள் ஜெனிவா தீர்மானம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போதே பல கடிதங்களை எழுதியிருதோம். அந்த கடிதங்களில் கூறிய விடயங்கள் தற்போது நடைமுறையில் நடைபெறுவதனை இப்போது எடுத்து காட்டியிருந்தேன்.

வெளிநாட்டு ஈடுபாட்டுடன் இந்த போர்க்குற்ற விசாரணை நடைபெறாவிட்டால் நீதியை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும் என கூறியிருந்தேன். வெளிநாட்டு நீதிபதிகளை அரசு கொண்டுவருவதாக தெரியவில்லை. வெளிநாட்டு உள்ளீடுகள் வராவிட்டால் எங்களுக்கு நீதி கிடைக்காது என்பது நிச்சயம் எனவும் சுட்டிக்காட்னேன்.

போர்க்குற்ற சட்டமானது எமது சட்டத்திற்குள் கொண்டுவரப்படல் வேண்டும். அதாவது பலநாடுகளில் இருக்கும் சட்டமாக இருந்தாலும், எமது நாட்டில் போர்க்குற்றம் இழைக்கப்படும் போது சட்டமாக இருக்கவில்லை. எனவே எங்களுடைய நாட்டு சட்டத்திற்குள் போர்க்குற்ற சட்டம் உள்வாங்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

இது சம்பந்தமாக அரசு தரப்பு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதனை அவருக்கு வலியுறுத்தி இருந்தேன். அதன் பின்னர் பெண்கள் சம்பந்தமான விடயங்களையும் குறிப்பிட்டிருந்தேன். விதவைகளின் எண்ணிக்கை, அவர்களுடைய பாதுகாப்பு, அவர்கள் தொடர்பான செயற்திட்டங்கள் மேற்கொள்ள கூடிய அவசியங்களை போன்றவற்றை எடுத்து கூறினேன்.

அவ்வாறு முன்னெடுக்கப்படவேண்டிய செயற்திட்டங்கள் எவ்வாறான வகையில் அமைய வேண்டும் என எம்மிடம் கோரி அந்த செயற்திட்டங்களை எம்மிடம் தந்தால் அதற்கான நிதியுதவிகளை வளங்குவதாவும்  பிரித்தானிய அமைச்சர் கூறினார்.

யுத்தம் முடிந்து எட்டுவருடங்கலாகும் நிலையில் தொடர்ந்தும் ஒரு இலட்சத்துக்கு அதிகமான இராணுவம் இருப்பது எந்தளவிற்கு எமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதனை நாங்கள் குறிப்பிட்டிருந்தோம்.

எனினும் சமாதானம் நோக்கி செல்லும் போது ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதற்கு நான், நாங்கள் விட்டுக்கொடுப்பதற்கு நாங்கள் முன்வாந்தால் கூட பலவிதங்களில் எங்களை அடிமைப்படுத்தும் விதத்தில் தான் சில சில நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். தெற்கில் எடுக்கப்படும் முடிவுகள், எங்கள் தனித்துவத்தையும் உரிமைகளையும் புறக்கணிப்பதாக இருப்பதனையும் நான் எடுத்து கூறினேன்' என்று முதலமைச்சர் தெரிவித்தார்
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X