2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இனவெறியை ஊட்டி, மக்களின் உணர்வுகளை எழுப்பி வாக்குகளை பெற விரும்பவில்லை: டக்ளஸ் தேவானந்தா

Kogilavani   / 2011 ஜூலை 25 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
'இனவெறியையும், மொழி வெறியையும் ஊட்டி, எமது மக்களின் உணர்வுகளை எழுப்பி வாக்குகளை பெறும் மலினமான உத்திகளை நாம் முயன்றதில்லை. மனச்சாட்சியுள்ள எவரும் இதனை ஏற்றுக் கொள்வர்' என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

 

 

நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்குத் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாங்கள் 3 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியிருக்கிறோம். அத்துடன் 2 உள்ளூராட்சி சபைகளில் மிகச் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றத் தவறியிருக்கிறோம். எங்களிடம் தங்களுடைய உள்ளூராட்சி அதிகாரத்தை கையளித்த மக்களுக்கு முதலில் எனதும் எனது வேட்பாளர்களினதும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அத்துடன் இதர சபைகளிலும் எங்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எங்களிடம் ஆட்சி அதிகாரத்தைக் கையளித்த மக்களுக்கு ஓர் உண்மையான, நேர்மையான,  ஊழலற்ற சேவையை வழங்குவோம் என நான் இத்தருணத்தில் உறுதி கூறுகிறேன். அத்துடன்  அதிகாரத்தைக் கைப்பற்றத் தவறிய உள்ளூராட்சி சபைகளில் நாம் ஒரு பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சியாகச் செயற்பட்டு இயலுமான வகையில் அத்தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்ற உதவுவோம் எனவும் உறுதி கூறுகிறேன்.

நான் என்றுமே சொன்னதைச் செய்பவன், செய்வதையே சொல்பவன். வெறும் வாக்குகளைப் பெறுவதற்காக வானத்திலிருந்து சந்திரனைக் கொண்டு வந்து தருவேன் என்று நான் வாக்குறுதிகளை அளிப்பதில்லை. எனது மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற நான் இதய சுத்தியுடன் முயன்றிருக்கிறேன். இயலுமான வகையில் மக்களின் அடிப்படைத் தேவைகள் பலதை நான் நிறைவு செய்தும் இருக்கிறேன். கட்சி பேதங்களுக்கு அப்பால் மக்கள் இதனை அறிவார்கள் என்பது எனக்குத் தெரியும்.

நாம் இந்த தேர்தலில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற்றிருக்காவிட்டாலும், எமது மக்களுக்கு எந்தவித இழப்புக்களையும் ஏற்படுத்தவில்லை என்பதில் பெருமையடைகிறேன்.எமக்கு ஆதரவளித்த அனைவருக்கும், எமக்கு ஆதரவாக நல்லெண்ண நோக்கத்தோடு வருகை தந்து ஒத்துழைப்பு வழங்கியிருந்த இலங்கை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என்றார்.


You May Also Like

  Comments - 0

  • bzukmar Monday, 25 July 2011 11:23 PM

    இனவெறியும் மொழிவெறியும் தானே அரசியல்வாதிகளின் மூலதனம் இதற்க்கு போய் அலட்டிக்கலாமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .