2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழ். பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்டமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் கண்டனம்

Super User   / 2012 மே 22 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி, நவரத்தினம்)

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளர் பரமலிங்கம் தர்ஷhனந் மீது முகமூடி அணிந்த குழு மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோனட என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இத்தாக்குதலின் மூலம் யாழ். மக்கள் மத்தியில் எழுந்துள்ள பீதி மிகவும் கவலைக்குரிய விடயமாகும். கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை யாராலும் ஒடுக்க முடியாது.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் எப்பகுதியிலிருப்பினும் தமது கருத்துகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை சகலருக்கும் உண்டு. அதனை வடக்கு  தெற்கு என்று மட்டுப்படுத்த முடியாது.

தாக்குதல் மேற்கொண்டவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் கொண்டுவருவது காவற்துறையினதும் அரசாங்கத்தினதும் கடமையாகும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கு அரசாங்கம் பின்னடிக்கும் சந்தர்ப்பத்தில் இதன் பின்னால் அரசாங்கம் உள்ளது என்ற குற்றச்சாட்டு எழும்.

வடக்கு பிரதேச்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் கொலை, கொள்ளை, தாக்குதல் போன்ற சம்பவங்கள் வடக்கு மக்களின் இயல்பு வாழ்விற்கும், சுமூக சூழலிற்கும் பாரிய அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. இவைகளை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் வடக்கில் ஜனநாயம் என்றும் கேள்விக்குறியாகவே அமையும்.

யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் வட பகுதியைச் சேர்ந்த மக்கள் இன்னும் ஒருவித அச்ச சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர். இது மிகவும் துர்ப்பாக்கிய நிலையாகும்.

30 வருட காலமாக யுத்தத்தால் பாதிப்புற்ற வடக்கு கிழக்கு பகுதியை சேர்ந்த மக்கள் யுத்தம் முடிவடைந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் நிம்மதியாக வாழ்வதற்கான சூழலை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 

தமிழ் மக்களுக்கான நியாயமானத் தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு சர்வதேச மட்டத்தில் இலங்கை மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் வட பகுதியில் இடம்பெறும் ஜனநாயக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளிவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் இலங்கை மேலும் சர்வதேச கெடுபிடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்" என்றார்.

இதேவேளை, தமிழ் மக்கள் மனங்களில் இருந்து பிரிக்க முடியாத மே 18அன்று, யாழ். கல்வி  சமூகத்தின் முகத்தில் ஓங்கி அறையும் நடவடிக்கையாகவே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளர் பரமலிங்கம் தர்சானந் மீதான தாக்குதல் நடவடிக்கை அமைந்திருக்கின்றது. அவர் மீது தாக்குதல் நடத்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன் உருப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்,

"யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் காலங்காலமாக நியாயங்களைத் தட்டிக்கேட்கின்ற ஒரே காரணத்திற்காக பல்வேறு உயிரிழப்புக்களை, நெருக்கடிகளை, அச்சுறுத்தல்களை எதிர்கொண்டே வந்திருக்கின்றது. இவ்வாறான தொடர் நடவடிக்கைகளால் பல மாணவர்கள் தமது எதிர்கால கல்வியினை இடைநடுவே கைவிட்டு புலம்பெயர் நாடுகளில் தஞ்சமடைந்த சம்பவங்கள் கூட இடம்பெற்றிருக்கின்றன.

போருக்கு பின்னர் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு விட்டதாகவும் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் நாட்டில் இல்லை என்றும் அரசாங்கம் பகிரங்கமாக உலக அரங்கிற்கு தெரிவித்து வருகின்றது. ஆனாலும் சமூகத்திற்காகவும் மக்களுக்காகவும் குரல் கொடுக்கின்ற நபர்களை இலக்குவைத்து தற்போது புதிய வடிவிலான தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது.

உதயன் பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளர் ஞா.குகநாதன், எனது பிரத்தியேக செயலாளரும் தற்போதைய வலி. கிழக்கு பிரதேச சபை தலைவருமான அ.உதயகுமார், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் சு.தவபாலசிங்கம் ஆகியோர் மீதான தாக்குதல் பாணியின் தொடரான தாக்குதலாகவே தர்சானந் மீதான தாக்குதலும் அமைந்திருக்கிறது.

இந்த நடவடிக்கைகள் எவ்வாறானர்கள் மீது நடத்தப்பட்டிருக்கின்றன என்பதை நோக்கினால் இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். இந்தத் தாக்குதல்ச் சம்பவம் வன்மையான கண்டனத்துக்குரியது. இவ்வாறான நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கையில் நேர்மையாக பொலிஸாரும் சட்டத்துறை சார்ந்தவர்களும் ஈடுபட வேண்டும்.

விசேட பொலிஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களை அழைத்து தெரிவிப்பதுடன் நின்று விடாது உண்மையான குற்றவாளிகளை அடையாளங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூகப் பிரதிநிதிகள், மாணவ பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் போன்ற மக்களுக்காகக் குரல்கொடுப்பவர்களை அடக்குவதாக நினைத்துக்கொண்டு நடத்தப்படும் இவ்வாறான நடவடிக்கைகள் மாணவர் என்கின்ற மாபெரும் சக்தியின் எதிர்ப்பலைக்களை சந்திக்கும் நிலையினை நோக்கியே கொண்டு செல்லும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் மாணவர்களின் வீச்சான செயற்பாடுகள் அதிகரிக்கும் என்பதையே சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .