2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்கப்படுவதாக வெளியான தகவல் குறித்து ம.உ.ஆ தலைவர் கேள்வி

Kogilavani   / 2012 ஜூலை 27 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                              (எஸ்.கே.பிரசாத், ஜே.டேனியல்)
முல்லைத்தீவுப் பகுதியில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற காணமல் போனவர்களுக்கான மரணச்சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கை குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமான சுரேஷ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை முல்லைத்தீவில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளிக்கும்  ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதில் 'கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களின் மற்றும் சரணடைந்தவர்களின் பெற்றோர்கள் காணாமல் போன விடயம் தொடர்பாக பல்வேறு இடங்களில் முறைப்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் அவர்களின் விவரங்களை தெரிந்துகொண்ட இராணுவத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போனவர்களின் உறவினர்களை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து காணாமல் போனவர்களிற்கான மரணச்சான்றிதழ் வழங்க  நடவடிக்கை எடுத்து வருகின்றதாக  சுரேஸ்பிரேமச்சந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியிருந்த நிலையில் இந்தச் செய்தி தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி கேட்டதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை 30 இற்கும் மேற்பட்டவர்கள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அவ்வாறு அழைக்கப்பட்டவர்கள் வழங்கிய தகவல்களின் படியே தான் இந்தக் கருத்தை முன்வைத்ததாகவும் இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தொடர்பு கொண்டு இதுபற்றி விசாரணை நடத்துமாறு தான் கூறியதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

இதேவேளை, மனித உரிமைகள் தொடர்பாக சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வரங்கு ஒன்று யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மனித உரிமைகள் ஆணைக்குழு தயாரித்துள்ள செயற்திட்டங்கள் தொடர்பாக சிவில் சமூகப்பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு செய்து ஆலோசனை பெறுவதற்காக இந்த கலந்தாய்வரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் முதியவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .