2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

தமிழர்களால் மாத்திரமே முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை பெற்றுக்கொடுக்க முடியும்: யாழ். பிரதி மேயர்

Super User   / 2012 ஒக்டோபர் 30 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


முஸ்லிம்களின் மக்களின் மீள்குடியேற்றத்தினை மனிதாபிமான ரீதியில் பார்க்க வேண்டும். தவிர சட்ட ரீதியில் பார்ப்பது தவறான வியடமாகும் என யாழ். பிரதி மேயர் எம்.எம். ரமீஸ் தெரிவித்தார்.

வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் 22ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ். ஒஸ்மானியா கல்லூரியில் நடைபெற்றது.

யாழ். - கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டு  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

"1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலை புலிகள் இயக்கத்தினால் 3 நாட்களில் பலவந்தமாக 80,000 முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இன்று வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் விடுதலை புலிகளின் அழிவுக்கு பின்னர் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வதற்கு அரச அதிகாரிகள் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கின்றார்கள்.

சட்ட ரீதியாக பார்ப்பதை விட மனிதாபிமான ரீதியில் பார்க்க வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள்  சொந்த இடங்களில் வாழ்வதை விட மாற்று இடத்தில் நன்றாக வாழ்வதால் சொந்த இடத்தில் நிரந்தரமாக வாழ மறுக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டினையும் முன்வைக்கின்றார்கள்.

5,000 குடும்பங்கள் வாழ வேண்டிய இடத்தில் 300 குடும்பங்கள் வாழ்கின்றார்கள். தரவுகள் ரீதியாக பார்த்தால் சொந்த இடத்தில் வாழ்வது சிறப்பாக இருக்கும். ஆனால் புத்தளம் பகுதியில் பார்த்தால் இன்னும் குடிசை வீடுகளும், வேலைவாய்ப்பு இல்லாமலும் கற்றல் செயற்பாடுகள் இல்லாமலும் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றார்கள்.

2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்வதற்காக யூ.என்.எச்.சீ.ஆர் நிறுவனம் பழைய இடம்பெயர்ந்தோர் புதிய இடமபெயர்ந்தோர் என்று பிரித்து பதிவுகளை மேற்கொண்டார்கள். அதில் 2,150 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டார்கள். புதிய இடம்பெயர்ந்தோர்கள் மீள்குடியேற்றப்படவில்லை. மக்கள் விரக்கதியில் வாழ்கின்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்படாமைக்கான காரணத்தினை சில அரச அதிகாரிகள் முஸ்லிம் மக்கள் இங்கு வராததை சொல்கின்றார்கள். இக்காரணம் எங்களை ஏமாற்றுவதற்கான காரணம். முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்க்கமானதாகவும் ஆக்கபூர்வமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதற்கு தமிழ் மக்கள் உதவ வேண்டும்.

தமிழ் சமுகத்திடம் தான் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் இருக்கின்றது. ஏனென்றால், நூற்றுக்கு தொன்னூறு வீதம் தமிழ் மக்களில் தங்கி வாழ வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள். தமிழ் மக்கள் தான் முஸ்லிம் மக்களை அரவணைக்க வேண்டும் ஆதரிக்க வேண்டும். தமிழ் மக்களால் மட்டுமே முஸ்லிம் மக்களுக்கான மீள்குடியேற்றத்தினை பெற்றுக்கொடுக்க முடியும். தமிழ் மக்கள் விழித்து எல்லா வித உதவிகளையும் செய்ய வேண்டும்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .