2025 ஜூன் 18, புதன்கிழமை

அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுகிறது; அமெரிக்க ராஜதந்திரிகளிடம் யாழ். ஆயர்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 27 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.கே.பிரசாத், சுமித்தி


நாடாளுமன்றத்தில் இருக்கும் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டு நினைத்ததை சாதித்து விடலாம் என்று அரசாங்கம் எண்ணி பல செயற்பாடுகளை தன்னிச்சையாக செயற்படுத்தி வருகின்றது இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சர்வதேச நாடுகள் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம், அமெரிக்க ராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளார்.

போருக்குப் பிந்திய நிலவரங்கள் குறித்து ஆராய்வதற்கு இன்று யாழ்ப்பாணம் சென்ற அமெரிக்க ராஜதந்திரரிகள், ஆயர் இல்லத்தில் சந்தித்து இங்குள்ள நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடலின் போதே ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'வடபகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. இருந்தபோதும் காணாமல் போனவர்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இது குறித்த தவறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். இங்கு இப்போதும் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எண்ணி கண்ணீர் வடித்த வண்ணமே இருக்கின்றார்கள்.

அத்துடன் வடபகுதியில் வாழும் மக்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு வருவதோடு தொடர்ச்சியாக ஊடகங்கள் மீதுதான அடக்கு முறையும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. வடக்கில் தேர்தல் ஒன்றை நடத்துமாறு தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதும் தேர்தல் நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறதே தவிர அதற்கான சமிக்ஞைகள் எதுவும் இல்லை.

அரசாங்கம் பல செயற்பாடுகளை தன்னிச்சையாக செயற்படுத்தி வருகின்றது. பாராளுமன்றத்தில் இருக்கும் மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டு நினைத்ததை சாதித்து விடலாம் என்று எண்ணிக்கொள்கிறது. இதற்கு எதிராக சர்வதேச நாடுகள் அழுத்தங்களைக் கொடுக்கும் பட்சத்தில் நன்மை பயக்கும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .