2025 ஜூன் 18, புதன்கிழமை

அமைச்சர் டக்ளஸ் நீதிமன்றில் ஆஜர்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 28 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி


யாழ்ப்பாணத்தில் இயங்கும் உதயன் ஊடகத்திற்கு எதிராக 1000 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் (ஈ.பி.டி.பி) தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணைக்காக, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா இன்று தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்தார்.

தனக்கும் தனது கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உதயன் பத்திரிகையினால் அவதூறாக செய்தி வெளியிடப்பட்டதாகவும் இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான தனக்கு உதயன் நிறுவனம், ஆயிரம் கோடி ரூபாவினை நஷ்டஈடாக வழங்க வேண்டும் எனக் கோரி அமைச்சரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
 
இந்நிலையில், இன்று காலை மன்றில் ஆஜரான அமைச்சரிடம், உதயன் பத்திரிகை நிறுவனத்தின் சார்பில் ஆஜரான அதன் ஆசிரியர் பிரேமானந்த்தின் கோரிக்கைக்கு அமைய  இவ்வழக்கினை சமரசத்திற்கு கொண்டுவர அமைச்சரின் விருப்பம் குறித்து மாவட்ட நீதிவானினால் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 'உதயன் பத்திரிகையானது தன்மீதும் தனது கட்சிமீதும் களங்கம் ஏற்படுத்தும் முகமாக தொடர்ச்சியாக விஷமத்தனமான ஆதாரமற்ற பொய்ச் செய்திகள்; பிரசுரிக்கப்படுகின்றன. இதுதொடர்பாக இதனைப்போல பல அவதூறு செய்திகளுக்காக வழக்குத் தொடர உள்ளேன்.

முதலில் உதயன் பத்திரிகை நிறுவனத்தினர் எனதும் எனது கட்சிமீதும் மேற்கொள்ளப்பட்ட களங்கம் கற்பிக்கும் அவதூறு செய்திகளுக்காக நீதிமன்றின் முன் தோன்றி தமது தரப்பு நியாயத்தை தெரிவிக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன். அதன் பின்னர் சமரசம் குறித்து என்னால் சிந்திக்க முடியும்' என நீதவானிடம் கூறினார்.
 
அமைச்சர் சார்பாக நீதிமன்றில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி, 'மேற்படி உதயன் பத்திரிகையானது தான் வெளியிடும் செய்திகள் ஊடாக தனது கட்சிக்காரரான அமைச்சரின் அரசியல் வாழ்விற்கும் அவரது பெயருக்கும் மிகப்பாரதூரமான முறையில் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் இதற்கு நீதித்துறை ஊடாக உரிய நிவாரணங்களைப் பெற்றுத்தர வேண்டும்' எனவும் கேட்டுக்கொண்டார்.
 
இதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதவான் ஏ.ஆனந்தராஜா, இவ்வழக்கினை எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் அன்று விசாரணை தொடரும் என அறிவித்தார்.



You May Also Like

  Comments - 0

  • vigi Monday, 28 January 2013 09:00 AM

    இவர் இதயவீணை என்ற பெயரில் அரச வானொலியில் தமிழ் சிவில் சமுக உறுப்பினர்கள், தலைவர்கள் மீது நடத்திய பொய்மை நிறைந்த கோழைத்தனமான பிரசாரங்களுக்கு யார் வழக்கு தொடர்வது.. கொல்லபட்ட அப்பாவி பத்திரிகையாளர்கள் உட்பட்ட அப்பாவிகளுக்கு யார் பதில் சொல்லுவது

    Reply : 0       0

    Hari Monday, 28 January 2013 01:50 PM

    அரசின் ஆதரவுடன் செய்யும் அடாவடித்தனம், மற்றும் கள்ள வியாபாரம் போன்ற விடயங்களை எந்த கோட்டில் விசாரிக்கப்பட இருக்கிறது என்பதை மக்கள் அறிய விரும்புகின்றனர்.

    Reply : 0       0

    Sumathy m Tuesday, 29 January 2013 01:14 AM

    கடந்த காலத்தில் கல்விமான்கள் ,பத்திரிகையாளர்கள்,விடுதலைக்காக புறப்பட்ட எமது உடன்பிறப்புக்கள் எதிரிகளால் மட்டுமன்றி சகோதரர்களாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எமது மக்களின் அழிவில் பலர் பிழைப்பு நடத்தியிருக்கிறார்கள், நடத்திக்கொண்டும் இருக்கிறார்கள். தெற்கிலே சிங்களத் தலைவர்களுடன் கொஞ்சி குலாவல்,வடக்கிலோ இனவெறி கூச்சல். தங்கள் பிழைப்புக்காக எமது மக்களை அழிவிற்கிட்டு செல்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .