2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

அமெரிக்கா, இந்தியாவிற்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்ட பேரணி

Menaka Mookandi   / 2013 மார்ச் 20 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கைக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்க முற்படுவதை எதிர்த்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை பாரிய ஆர்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்;ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

யாழ். கோட்டை முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பமான இந்த ஆர்பாட்டப் பேரணியானது, முனியப்பர் வீதியூடாக வைத்திசாலை வீதி, மணிக்கூட்டு கோபுர வீதி, ஸ்டான்லி வீதி, கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதிகள் ஊடாக பயணித்து பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த ஆர்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டனர்.

இதில் குறிப்பாக 'அமெரிக்காவே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வாபஸ்பெறு, ஐ.நா.வே இன்னுமொரு போராட்டத்தை உருவாக்காதே, மீண்டும் எங்களுக்கு போர் வேண்டாம், இந்தியாவே முதலில் உனது பிரச்சினையை தீர்த்துக்கொள், ஒபாமா இரக்கமற்ற இரத்த உறிஞ்சி' போன்ற பல்வேறு வாசகங்களை எழுப்பியவாறு இந்த ஆர்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை அடைந்ததும், அங்கு கூடி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் உருவப்பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இந்த அர்பாட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன், விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர், ஈ.பி.டி.பி. கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • aj Wednesday, 20 March 2013 12:20 PM

    ஹஹஹஹ தாங்க முடியல இதை பார்த்து. அஹஹஹா தெற்கில் இருந்து பஸ் வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்து போராட்டம் செய்வதுக்கு பேசமா தெற்கிலே இதை செய்து இருக்கலாம். எல்லாம் விட இவர்கள் கைகளில் பிடித்து இருக்கும் பதாதைகளை பார்க்கும் போது சிரிப்பும் மறுபக்கம் கவலையும். எங்கள் தமிழ் மொழியை எழுத தெரியாவிட்டால் சிங்கள மக்கள் சிலர் தமிழர்கள், அல்ல தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை கொண்டு தெளிவாக எழுதி பிடிக்கணும். இங்கு என்ன செய்தாலும் ஜெனிவாவில் ஒன்றும் செய்துவிட முடியாது. தமிழர்கள் கொடி பிடிகிறார்கள் என்று காட்டபோய் கடையில் மூக்கு உடைந்து நிக்கிறது பேரினவாதம். தமிழர், ஒருவர் கூட பதாதை எழுத வரவில்லை என்பது மிக தெளிவு. சந்தோசம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .