2025 ஜூன் 18, புதன்கிழமை

பாலைதீவு, இரணைதீவுப் பகுதிகளில் மீன்பிடிக்க கடற்படை அனுமதி

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 30 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-என்.நவரத்தினராசா


முப்பந்தைந்து வருடகால இடைவெளியின் பின்னர் மீண்டும் பாலைதீவு இரணைதீவுப் பகுதிகளில் மீன் பிடிப்பதற்ககான அனுமதியை கடற்படையினர் மீனவர்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

பொன்னாலை கடற்படை முகாமில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் கடற்படைகளின் வட மாகாண கட்டளை அதிகாரி ரியல் அட்மிரல் உடவத்த, உதவி கட்டளை அதிகாரி கொமாண்டர் ஜீ.டி.எஸ்.விமலதுங்க, கப்டன்  அபேரத்ன உட்பட யாழ். மாவட்ட கடற்படை முகாம்களின் கட்டளை அதிகாரிகள், ஏனைய அதிகாரிகளுக்கும் யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சமாசங்களின் பிரதிநிதிகளும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளினால், பாலைதீவு, கற்க தீவு மற்றும் இரணைதீவுப் ஆகிய பகுதிகளில் தொழில் செய்வதற்க்கு தம்மை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள்.

இதனை உடனடியாக கருத்திற்கொண்டு ஆய்வுசெய்த கடற்படை அதிகாரிகள், பாலைதீவு மற்றும் இரணைதீவுப் பகுதிகளில் தொழில் செய்வதற்கு இன்றில் இருந்து அனுமதிப்பதாகவும் குறிப்பிட்ட தீவுகள் இரண்டிலும் தங்கி நின்று தொழில் புரிபவர்கள் கடற்தொழில் திணைக்களத்தின் அடையாள அட்டையுடன் கடற்தொழில் திணைக்கள அதிகாரியின் உறுதிப்படுத்தலையும் பெற்றுக்கொண்டு வந்து தொழில் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று குறிப்பிட்டனர்.

இவ்வாறு பாலைதீவு மற்றும் இரணைதீவுப் பகுதிகளில் தங்கி நின்று தொழில் செய்பவர்கள் தமது தங்கும் இடங்களை கடற்படையினரின் முகாம்களுக்கு அண்மையாக அமைப்பார்களாக இருந்தால் கடற்தொழிலாளர்களுக்கு வேண்டிய உதவிகளையும் கடற்படையினர் செய்யக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தனர். 

இதேவேளை, தென்னில்கையில் இருந்து வந்து சிலிண்டர்களுடன் கடலட்டை பிடிப்பவர்களினால் வடமாகாண கடற்தொழிலாளர்கள் கடுமையாக பாதிப்படைவதாகவும் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொள்ள வேண்டும் எனவும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்களின்  பிரதிநிதிகளால் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மன்னார் கடல் பகுதிகளில் இந்நடவடிக்கைகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதனால் கடலட்டையின் பெருக்கம் பெருமளவில் பாதிப்படைந்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்தக் கோரிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த கடற்படை அதிகாரிகள், 'கடலட்டை பிடிப்பதனை தடை செய்வதற்கான அதிகாரம் தமக்கு கிடையாது எனவும் இதனை மீன்பிடித் திணைக்கள அலுவலர்கள் மூலம் கடற்தொழில் அமைச்சுடன் தொடர்புகொண்டு முறைப்பாடு செய்ய வேண்டும்' என்றும் குறிப்பிட்டனர்.

'கடற்தொழில் அமைச்சில் இருந்து உரிய அனுமதியை பெற்று  தென்னிலங்கையில் இருந்து வரும் கடற்தொழிலாளர்கள் தொழில் செய்வதை தடைசெய்ய முடியாது' எனவும் கடற்படை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .