2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மத்திய அரசின் தலையீடற்ற சமஷ்டி தீர்வே தேவை: புளொட்

Menaka Mookandi   / 2013 ஜூன் 19 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

'இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு மத்திய அரசாங்கத்தின் தலையீடற்ற சமஷ்டி தீர்வே தேவை. எவ்வாறாயினும் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு எந்தக் காலத்திலும் கிடைக்கக்கூடாது என்பதில் அரசாங்கம் தீவிரமாகச் செயற்படுகின்றது' என்று புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை, யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

'1987ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதில் ஒன்றும் இல்லை என்று அதனை நிராகரித்த தமிழர் தரப்பு, இன்று 13இல் எந்தவிதமான மாற்றமும் செய்ய வேண்டாம். அதற்கான அழுத்தத்தை இந்தியா வழங்க வேண்டும் என்று  சொல்லும் அளவிற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் காய் நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளது' என்று குறிப்பிட்டார்.

'தனிநாடு என்பது தமிழர்கள் அடைய முடியாத ஒரு கனவு என்றும் அவ்வாறு அது நடைபெற்றால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சுட்டிக்காட்டியிருந்தார். 

இருந்தபோதும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை விளங்கிக்கொண்ட அவர், இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் கரையோரத்தில் உள்ள வீதியை எவ்வளவு செலவானாலும் புனரமைத்து தருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இவர்களின் இந்தச் செயற்பாடுகள் எல்லாம் தங்கள் நலன்களை மையப்படுத்தியதாகவே அமைந்ததே தவிர எங்கள் நலனிற்காக அல்ல. இந்நிலையில், அவர்கள் தொடர்பில் எங்களுக்கு எப்போதும் ஒரு கேள்வி இருந்துகொண்டே இருந்தது' என்று சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

'இன்றும் 13ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியா அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்துள்ளது. அது எவ்வளவு நடமுறைச் சாத்தியமானது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சிலவேளைகளில் பொருளாதார ரீதியிலும் புவியியல் ரீதியிலும் இந்தியா ஒரு அழுத்தம் கொடுக்க கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. இருந்தாலும் சீனாவைக் காட்டியே மஹிந்த ராஜபக்ஷ தனது காரியங்களை நடத்தி வருகின்றார்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'யுத்தம் முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னர் ஜனாதிபதி பல வாக்குறுதிகளை எம்மிடம் வழங்கியிருந்தார். அதற்கு எதிர்மாறாக அவர் இப்போது செயற்பட்டு வருகின்றார். யுத்தத்தினையும் புலிகளையும் காட்டி சிங்கள மக்களை தன்வசப்படுத்தி இருக்கின்றார்கள்.

இவ்வாறான நிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு எந்தக் காலத்திலும் கிடைக்கக்கூடாது என்பதில் அரசு தீவிரமாகக் செயற்படுகின்றது. மத்திய அரசாங்கத்தின் தலையீடுகள் அற்ற தீர்வாக சமஷ்டி தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்' என்று சித்தார்த்தன் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .