
-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்
யாழ். திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தி பகுதியில் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் இன்று சனிக்கிழமை தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் வீதி அகலிப்பு பணி மேற்கொண்டு வரும் நிலையில், அந்த பகுதியில் குழி தோண்டும் போது இரண்டு பெட்டிகளில் துப்பாக்கி ரவைகள் காணப்பட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட நபர்கள், கோப்பாய் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் கோப்பாய் பொலிஸார் மற்றும் 511ஆவது படைப்பிரிவு இராணுவத்தினரும் இணைந்து மோப்ப நாயின் உதவியுடன் துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் தற்போது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகளை திங்கட்கிழமை யாழ். நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் மேலும் கூறினர்.
குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்ட இடத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மாணவர் பேரவை அலுவலகம் 2002ஆம் தொடக்கம் 2006ஆம் ஆண்டுவரை செயற்பட்டுள்ளது.
யாழ். மாவட்டதிற்குள் 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் உள்ள விடுதலைப்புலிகள் இதனை பயன்படுத்திவிட்டு எஞ்சியதை புதைத்து வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
