2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வடக்கில் மானமுள்ளோர் அரசுக்கு எதிராகவே வாக்களிப்பர்: அசாத்

Kanagaraj   / 2013 ஜூலை 31 , பி.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

மானமுள்ள தமிழனும் முஸ்லிமும்; வட மாகாண சபை தேர்தலின் போது அரசாங்கத்திற்கு விரோதமாக வாக்களிப்பர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.

வட மாகாண சபைக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அசாத் சாலி,

வட மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாண சபை தேர்தல் நடக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கின்றது. தமிழர்களும் முஸ்லிம்களும் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்றால் வடக்கு வாழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்;சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

அரசாங்கத்தினை பொறுத்த மட்டில், தமிழ் பேசும், அதாவது தமிழ், முஸ்லிம்களாக இருக்கட்டும் அவர்களுக்கு எந்தவித சுதந்திரமும் இல்லை.

நாங்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஒரு வீட்டிற்கு சென்றால், இராணுவ புலனாய்வாளர்கள் அவர் என்னத்திற்கு வந்தார் எதற்கு வந்தார்கள் என கேள்வி எழுப்புகின்றார்கள். அதேவேளை, இன்று வேட்பு மனுதாக்கல் செய்ய வந்த நேரம், ஜே.வி.பி.யினரின் வேட்பாளர்களின் வீட்டிற்கு சென்று ஜே.வி.பி.யில் எதற்கு கேட்கின்றாய் என வினவியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், எமது வீட்டிற்கும் வரத்தான் போகின்றார்கள். இந்த நாட்டில் பேசக் கூடிய சுதந்திரம் இல்லை. தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய சென்ற வேளை நான்கு பேரை மட்டுமே அனுமதித்தார்கள், ஆனால், அரசாங்க தரப்பிலிருந்து ஐம்பது, நூறு பேர் செல்கின்றார்கள். இது என்ன நியாயம் என்றும அவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் கூட நாங்கள் தேர்தலுக்கு முகம் கொடுக்கப் போவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில், ஒவ்வொரு தமிழனுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிப்பது ஒரு கடமையாக இருக்கின்றது.

அரசாங்கத்திற்கு விரோதமாக வாக்களியுங்கள். அதே நேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வாக்களியுங்கள் என்று சொல்கின்றோம் என்றால், இந்த நாட்டில் தமிழன் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்றால், இந்த நாட்டில் தலை நிமிர்ந்து முஸ்லிம் ஒருவர் வாழ வேண்டுமென்றால், நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சியின் மூலம் தான் நடக்கும் என்றும் அவர் சொன்னார்.

இந்த அரசிற்கும் எந்த வித சாதாரணமான விடயங்களையும் நாம் எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு நாளும் பத்திரிகையில் பார்த்தால், பிரதேச சபை தலைவர் உறுப்பினர்களில் பாலியல் துஷ்பிரயோகம் இன்றேல் இலஞ்சம் பெற்றதில் கைது என்றே நாம் பார்த்திருக்கின்றோம்.

எந்த நாளும் அநீதி இழைக்கப்பட்டு வருகி;ன்றது. ஆனால், எந்த வித நடவடிக்கையும் அரசாங்கத்தினால் எடுப்பதில்லை. மக்களுக்கு நின்மதியும் சந்தோஷமும் வேண்டும்.அவ்வாறு வேண்டுமென்றால் மானமுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம்கள் அரசாங்கத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .